ADDED : ஆக 26, 2011 01:02 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் வி.சி., கட்சியினர் வைத்திருந்த பேனரை மறைத்து தே.மு.தி.க., வினர் பேனர் வைத்ததால் மோதல் ஏற்படும் நிலை உருவானது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், வி.சி., கட்சியினர் திருமாவளவனை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரை மறைத்து தே.மு.தி.க., வினர் விஜய்காந்த் பிறந்த நாள் வாழ்த்து பேனரை நேற்று முன்தினம் இரவு வைத்தனர். இதையறிந்த வி.சி., கட்சியினர் நேற்று பகல் 12.15 மணிக்கு மேம்பாலத்தின் கீழ் திரண்டனர். தே.மு.தி.க.,வினரும் அங்கு திரண்டதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. தகவல் அறிந்த திண்டிவனம் டவுன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தே.மு. தி.க., வினர் பேனரை வேறு இடத்தில் வைத்தனர். உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஒன்றிய, நகர தே.மு.தி.க., நிர்வாகிகள் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பேனர் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தே.மு. தி.க., பேனர்களை கல் வீசி கிழித்துள்ளனர். இது குறித்து தே.மு.தி.க., வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.