/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சபை கண்ணியம் காக்கத் தவறிய கோபி கவுன்சிலர்கள்சபை கண்ணியம் காக்கத் தவறிய கோபி கவுன்சிலர்கள்
சபை கண்ணியம் காக்கத் தவறிய கோபி கவுன்சிலர்கள்
சபை கண்ணியம் காக்கத் தவறிய கோபி கவுன்சிலர்கள்
சபை கண்ணியம் காக்கத் தவறிய கோபி கவுன்சிலர்கள்
ADDED : செப் 13, 2011 01:53 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி கூட்டத்தில் ஆண் கவுன்சிலர்களின் ஆபாச
சைகைகளால், பெண்கள் கவுன்சிலர்கள் தலை குனிய வேண்டிய அவலம் ஏற்பட்டது. கோபி
நகராட்சி சிறப்பு கூட்டம் சென்ற வாரம் நடந்தது. 5.5 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்டம் செயல்படுத்த தீர்மானம் கொண்டு
வரப்பட்டது. திட்டம் கொண்டு வருவதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் - தி.மு.க.,
கவுன்சிலர்கள் கேட்டனர். அடுத்த கூட்டத்தில் ஆதாரம் காண்பிப்பதாக தலைவி
ரேவதிதேவி கூறியிருந்தார். கோபி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம்
துவங்கியதும், 'சிறப்பு சாலை திட்ட நிதி ஒதுக்கீடுக்கான ஆதாரத்தை காண்பிக்க
வேண்டும்' என காங்கிரஸ் மாரிமுத்து, சித்ரா, தி.மு.க., தீலிப் உள்ளிட்ட
கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். நகராட்சி தலைவர் ரேவதி தேவி , ''சென்னை
சென்ற அதிகாரிகள் இன்னும் வரவில்லை. 15ம் தேதிக்குள் ஆதாரம்
காண்பிக்கிறேன்,'' என்றார். காங்கிரஸ் - தி.மு.க., கவுன்சிலர்கள் ஒரு மித்த
குரலில், 'கூட்டத்தில் ஆதாரத்தை காண்பிக்கிறேன் என கூறியது
விளம்பரத்துக்காகத்தான்' என்றனர். தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
மாரிமுத்து, ''சிறப்பு திட்டத்துக்கான ஆதாரத்தை காண்பிக்காததால் பெரும்
ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்,''
என்றபடி, வெளிநடப்பு செய்தார். அடுத்த நிமிடம் மீண்டும் வந்தார். காங்கிரஸ்
காஜான், ''என் வார்டில் 50 மீட்டர் நீளத்துக்கு சாலை வசதி இல்லாததால்
மக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால், சனிக்கிழமை மட்டும்நடக்கும் சந்தைக்கு
பொது நிதியில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடக்கிறது,''
என்றார். நகராட்சி தலைவி, ''வாரச்சந்தை மேம்படுத்தவில்லை, தினசரி
சந்தைக்குதான் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார். தீர்மான நகலை
பார்த்த கவுன்சிலர் காஜான், 'மன்னித்து விடுங்கள்' என்றார். கவுன்சிலர்,
மன்னிப்பு கேட்டதும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'கமென்ட்' அடித்தனர்.
மாரிமுத்து, ''சென்ற ஐந்தாண்டுகளாக எதிர்க்கட்சி கவுன்சிலர்களால் எந்த
பிரச்னையும் இல்லை; உங்கள் கவுன்சிலர்களால்தான் உங்களுக்கு பிரச்னை,'' என,
கை விரல்களை மடக்கி ஆபாசமாக சைகை ஆட்டினார். ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.,
மாரிச்சாமி, தலைவர் மேடை அருகே வந்து, இரு கை விரல்களையும் மடக்கி அவரும்
ஆபாசமாக சைகை காட்டினார். இருவரும் மாறி மாறி ஆபாசமாக சைகை காட்டி பேச,
தலைவி ரேவதிரேவி மற்றும் பெண்கள் கவுன்சிலர்கள் அனைவரும் தலை குனிந்தனர்.
கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இப்பிரச்னையில் தலையிட்ட தலைவர்
ரேவதிதேவி, இருவரையும் சமாதானப்படுத்தினார்.
சபையில் பேசுவதற்கென்று சில மரபுகள் உள்ளன. கவுன்சிலர்கள் அவற்றை பின்பற்ற வேண்டும் என, ஓட்டளித்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.