Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆத்தூர் கோர்ட்டுக்கு எதிரே விபச்சாரம் நடத்தி வந்த கும்பல் கூண்டோடு கைது

ஆத்தூர் கோர்ட்டுக்கு எதிரே விபச்சாரம் நடத்தி வந்த கும்பல் கூண்டோடு கைது

ஆத்தூர் கோர்ட்டுக்கு எதிரே விபச்சாரம் நடத்தி வந்த கும்பல் கூண்டோடு கைது

ஆத்தூர் கோர்ட்டுக்கு எதிரே விபச்சாரம் நடத்தி வந்த கும்பல் கூண்டோடு கைது

ADDED : ஆக 21, 2011 02:40 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் சார்பு நீதிமன்றம் எதிரே உள்ள ஹோட்டலில், வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த ஹோட்டல் உரிமையாளர் உள்பட ஐந்து பேரை, போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கடலூர், ஆத்தூர் பகுதியை சேர்ந்த இரு இளம்பெண்களை மீட்டு, மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் கடை வீதியில், மாவட்ட உரிமையியல் மற்றும் சார்பு நீதிமன்றம், ஆத்தூர் வனச்சரகர் அலுவலகம் உள்ளது. இதற்கு எதிரே, 'ஹோட்டல் வினோத்' செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில், கடந்த இரு ஆண்டுக்கு மேலாக விபச்சார தொழில் நடந்து வந்துள்ளது.



ஹோட்டல் உரிமையாளர் கனகாம்பாளின் மகன்கள் செந்தில்குமார், வெங்கடேசன் ஆகியோர், சேலம், கடலூர், மதுரை, திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் விபச்சார பெண்களை அழைத்து வந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஹோட்டலில் விபச்சாரம் நடத்தி வருவது குறித்து, ஆத்தூரை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, மாவட்ட எஸ்.பி., மயில்வாகனனிடம் புகார் செய்தார். அதன்பேரில், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., வெங்கடாஜலம், மகளிர் எஸ்.ஐ.,க்கள் வளர்மதி, வான்மதி, ஜெயராணி உள்பட, 15க்கும் மேற்பட்ட போலீஸார், ஹோட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஹோட்டல் உள்ளே இரு அறைகளில், பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, விபச்சாரம் நடத்தி வந்த ஆத்தூர் கோட்டை, பச்சமுத்து தெருவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கனகாம்பாள் (51), அவரது மகன்கள் வெங்கடேசன் (26), செந்தில்குமார் (23), புரோக்கர்கள் தர்மலிங்கம் (30), சாமிநாதன் (47) ஆகிய ஐந்து பேரையும், போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மயிலாடுதுறை மற்றும் ஆத்தூரை சேர்ந்த இரு இளம் பெண்களை போலீஸார் மீட்டனர். அவர்களை, சேலம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ஹோட்டல் உள்ள இடத்தின் உரிமையாளர் சீனிவாசனை தேடிவருகின்றனர். நீதிமன்றத்துக்கு எதிரே பல ஆண்டுகளாக விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம், ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us