மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காலாவதியான முதல்வரின் "மொபைல் கவுன்சிலிங்' திட்டம்
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காலாவதியான முதல்வரின் "மொபைல் கவுன்சிலிங்' திட்டம்
மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காலாவதியான முதல்வரின் "மொபைல் கவுன்சிலிங்' திட்டம்
ADDED : ஆக 19, 2011 01:41 AM
ராமநாதபுரம் : மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட 'மொபைல் கவுன்சிலிங்' திட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளது.
கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெ., 2001-06ல் முதல்வராக இருந்த போது மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் 'மொபைல் கவுன்சிலிங்' திட்டத்தை துவக்கி வைத்தார். வாகனம், விழிப்புணர்வு முகாம்கள் நடத்த 'டிவி' உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் வக்கீல், இன்ஸ்பெக்டர் கொண்ட கவுன்சிலிங் குழு கிராமம்தோறும் சென்று வன்கொடுமைகளிலிருந்து பெண்கள் மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி வந்தனர். வெளியே சொல்வதற்கு தயங்கும் பெண்கள், 'இலவச டெலிபோன் எண் 1091ல் தெரிவித்தால் ரகசியமாக விசாரிக்கப்படும்' என்றும் அறிவுறுத்தி வந்தனர். இதனால் அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருமளவில் குறைந்தன. தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திட்டத்திற்கு வழங்கப்பட்ட வாகனம், 'டிவி' போன்றவைகள் மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வேறு பிரிவுக்கு எடுத்து கொண்டனர். தற்போது மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் மொபைல் கவுன்சிலிங் நடத்துவதாக கணக்கு மட்டும் காட்டி வருகின்றனர். இதனால் கிராமங்களில் மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கத் துவங்கி விட்டன. இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வன்கொடுமைகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


