ADDED : ஜூலை 14, 2011 01:33 AM
ஈரோடு : ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு யோகா கல்வி நேற்று வழங்கப்பட்டது.
மாணவச் செல்வங்கள் சிறப்புடன் கல்வி கற்று மனநலம், உடல்நலம் பெற்று கல்வி அறிவுடனும், கவின்மிகு ஆற்றலுடனும் செயல்பட சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் யோகா கல்வி முகாம் ஜூலை 8 முதல் 14ம் தேதி வரை நடத்த, பள்ளிக்கல்வி இயக்குநர் வசுந்தராதேவி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவியருக்கு நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் இப்பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சியாளர் காந்திமதி கூறியதாவது: உடல் ஆரோக்கயமாக இருக்க, உள்ளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து, செம்மையாக செயல்பட வைக்க வேண்டும். எத்தனையோ மாறுபட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளங்களை ஒருங்கிணைத்து, ஒற்றுமையுடன் செயல்படுவதில் யோகக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. யோகக்கலையை கற்றுத் தெரிந்து கொள்வதன் மூலம் உடல் சுத்தமாவதுடன், கல்வி கற்க மனதும் சுத்தமாகிறது. மனச்சுமை குறையும். இது அருமையான வாழ்க்கைக்கல்வி. தற்போது உடற்பயிற்சி, தியானம், அடிப்படை யோகாசனங்களை கற்றுத்தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


