Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏரியில் கழிவுநீரை விட மக்கள் கடும் எதிர்ப்பு "சர்வே' எடுக்கச் சென்ற ஊழியர் விரட்டியடிப்பு

ஏரியில் கழிவுநீரை விட மக்கள் கடும் எதிர்ப்பு "சர்வே' எடுக்கச் சென்ற ஊழியர் விரட்டியடிப்பு

ஏரியில் கழிவுநீரை விட மக்கள் கடும் எதிர்ப்பு "சர்வே' எடுக்கச் சென்ற ஊழியர் விரட்டியடிப்பு

ஏரியில் கழிவுநீரை விட மக்கள் கடும் எதிர்ப்பு "சர்வே' எடுக்கச் சென்ற ஊழியர் விரட்டியடிப்பு

ADDED : ஆக 01, 2011 04:07 AM


Google News
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதி கழிவுநீரை, அம்மாபாளையம் ஏரியில் விட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதாள சாக்கடை அமைக்க சர்வே எடுக்க முடியாமல், பேரூராட்சி தலைவர், ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். ஏரிகளை பாதுகாக்க அரசு வலியுறுத்தி வரும் நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பனமரத்துப்பட்டி பேரூராட்சியில், மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 8,000க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். வார்டுகளில் சரியான வடிகால் வசதியின்றி சாக்கடை அமைக்கப்பட்டதால், கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும், சாக்கடையில், பொதுக்கழிப்பிடம், செப்டிக்டேங்க் ஆகிய கழிவுகள் விடப்படுகிறது.பனமரத்துப்பட்டி சந்தைபேட்டை, காந்திநகர், 14வது வார்டு மற்றும், 2, 4,7,9 உள்ளிட்ட வார்டுகளில், சாக்கடையில் உள்ள கழிநீர் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. அதனால், ரோடுகளில் நிரம்பி வழியும் கழிவு நீரால் நுர்நாற்றம் ஏற்பட்டு, தொற்றுநோய் பரவுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, வார்டு பகுதி முழுவதும் சர்வே எடுக்கும் பணி நடந்து வருகிறது. வார்டுகளில் மேடு, பள்ளம் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதற்கு ஏற்றபடி பாதாள சாக்கடை கால்வாய் அமைக்க சர்வே செய்யப்படுகிறது.பேரூராட்சி பகுதியில் மொத்தம் உள்ள, 15வார்டுகளின் கழிவுநீரை, 11வது வார்டு களரம்பட்டி வழியாக அம்மாபாளையம் ஏரியில் கொண்டு சேர்க்கும் வகையில் திட்டமிடப்படுவதாக தகவல் வெளியானது.

பனமரத்துப்பட்டி ஏரியின் உபரி நீரை தேக்கி வைக்க பயன்படும் அம்மாபாளையம் ஏரியில், கழிவுநீரை விடப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நேற்று, பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பாஞ்சாலி, துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு சர்வே எடுக்கும் கருவியுடன் ஊழியரை, களரம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஏரியில் கழிவுநீரை விடுவதற்கு, களரம்பட்டியில் பாதாள சாக்கடை அமைக்க சர்வே செய்யக்கூடாது என, வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர், பேரூராட்சி தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, பாதாள சாக்கடைக்கு சர்வே செய்யாமல், பேரூராட்சி தலைவர், ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 11வது வார்டு களரம்பட்டி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பனமரத்துப்பட்டி டவுன் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த கழிவு நீரும், 11வது வார்டில் உள்ள தாசிக்காடு மழைநீர் குட்டையில் விடப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து, குடிக்க தண்ணீரின்றி அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.தற்போது, அம்மாபாளையம் ஏரியில் கழிவுநீரை விட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, பாதாள சாக்கடை அமைக்க களரம்பட்டியில் சர்வே செய்ய வந்தனர். இங்கு பாதாள சாக்கடை அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் திரும்பிச் சென்றனர்.இதையும் மீறி களரம்பட்டி வழியாக ஏரிக்கு கழிவுநீரை கொண்டு செல்ல முயற்சி செய்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us