Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின் பொதுக்கூட்டம்: ஒதுங்கும் வீரபாண்டி ஆதரவாளர்கள்

ஸ்டாலின் பொதுக்கூட்டம்: ஒதுங்கும் வீரபாண்டி ஆதரவாளர்கள்

ஸ்டாலின் பொதுக்கூட்டம்: ஒதுங்கும் வீரபாண்டி ஆதரவாளர்கள்

ஸ்டாலின் பொதுக்கூட்டம்: ஒதுங்கும் வீரபாண்டி ஆதரவாளர்கள்

UPDATED : ஆக 30, 2011 12:42 AMADDED : ஆக 29, 2011 11:20 PM


Google News
Latest Tamil News
'சட்டசபையில் ஜனநாயகப் படுகொலை' என்ற தலைப்பில், மாவட்டம் வாரியாகச் சென்று, மாஜி துணை முதல்வர் ஸ்டாலின், பொதுக் கூட்டத்தில் பேசி வருகிறார். சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் உள்ள நிலையில், சேலத்தில் பொதுக் கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பனமரத்துப்பட்டி மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தற்போது கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, தீவிரமாக செய்து வருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில், 23 தொகுதிகளை கைப்பற்றிய தி.மு.க., சட்டசபையில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கை ஓங்கிய நிலையில், சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்வதில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என, அவர்கள் தொடர்ந்து சபாநாயகரிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான சூழல் இல்லாதது, அ.தி.மு.க.,- தி.மு.க.,வை வசைபாடுவது போன்ற சம்பவங்களால், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதத்தை, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்து வருகின்றனர்.'சட்டசபையில், ஜனநாயகப் படுகொலை நடக்கிறது' என, மாஜி துணை முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட வாரியாகச் சென்று பொதுக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் அவர் பேசி வருகிறார்.



சேலம் மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மாநகர தி.மு.க., சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் உள்ள நிலையில், தற்போது பொதுக்கூட்டம் தேவையா என, ஆதரவாளர்கள் தரப்பில் சற்று எதிர்ப்பு வலுத்தது. வீரபாண்டி ஆறுமுகம் கைதாவதற்கு முன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, நேரடியாக வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறிச் சென்றார்.ஆனால், ஸ்டாலின் தரப்பில், எந்தவித ஆறுதலும் கூறவில்லை. அதனால், ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள் பங்கேற்காமல் ஒதுங்கலாம் எனவும் கூறப்படுகிறது.



செப்டம்பர் 2ம் தேதி மாலை 6 மணிக்கு, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க, பனமரத்துப்பட்டி மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மாஜி அமைச்சர் ஆதரவாளர்கள் யாரும், இதில் அதிகப்படியான அக்கறை காட்டவில்லை.



இது குறித்து, மாநகர தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் உள்ள நிலையில், பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமா என கேள்வி எழுந்தது. இருப்பினும், மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தப்பட்டு வருவதால், சேலத்திலும் நடத்த திட்டமிட்டோம். வீரபாண்டி ஆறுமுகத்திடமும், இது குறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.மாநகர தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்றாலும், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தான் முழுமையாக அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் மீது, போலீஸ் பொய் வழக்கு போட்டதைக் கண்டித்தும் ஸ்டாலின் பேச உள்ளார். அதனால், தி.மு.க.,வினர் யாரும் ஒதுங்கிச் செல்லமாட்டார்கள். கூட்டத்தை நல்ல முறையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us