Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சட்டக் கல்லூரி துவங்க அனுமதி: அரசுக்கு உத்தரவு

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சட்டக் கல்லூரி துவங்க அனுமதி: அரசுக்கு உத்தரவு

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சட்டக் கல்லூரி துவங்க அனுமதி: அரசுக்கு உத்தரவு

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சட்டக் கல்லூரி துவங்க அனுமதி: அரசுக்கு உத்தரவு

ADDED : செப் 23, 2011 11:01 PM


Google News

சென்னை: திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி துவக்க, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு அனுமதி வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில், திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக் கல்லூரி என்ற பெயரில் துவக்க அனுமதி கோரி, அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், அரசு தரப்பில் என்.ஓ.சி., வழங்கவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, சட்டத் துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதையும், சட்டத் துறை நிராகரித்து, கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அதில், 'சட்டக் கல்லூரிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதியில்லை. செங்கல்பட்டு, வேலூரில், ஏற்கனவே சட்டக் கல்லூரிகள் இருப்பதால், திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி தேவையில்லை' என கூறப்பட்டது.



இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜி.கே.மணி, மனு தாக்கல் செய்தார். 'விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலையில் சட்டக் கல்லூரிகள் இல்லை. திண்டிவனத்தில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் வேலூர், 60 கி.மீ., தூரத்தில் செங்கல்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன' என வாதாடப்பட்டது.



மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு: பல்கலைக் கழக மானியக் குழு வழிமுறைகளின்படி, மனுதாரரின் சட்டக் கல்லூரியில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபந்தனையை மனுதாரர் பூர்த்தி செய்துள்ளார். ஏற்கனவே ஒரு சட்டக் கல்லூரி அந்தப் பகுதியில் இருந்தால், அதற்காக புதிதாக சட்டக் கல்லூரி துவக்க அனுமதி மறுப்பதில் நியாயமில்லை என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொகை, அங்கு இருக்கும் சட்டக் கல்லூரி எந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை மட்டும், சட்டத் துறை பரிசீலித்துள்ளது. கடலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என தெரியவில்லை. இந்த மூன்று மாவட்டங்களுடன், விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்த்தால், மக்கள் தொகை 92 லட்சத்து 85 ஆயிரம் வருகிறது.



தமிழகத்தில் 636 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால்,சட்டக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 10 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், சட்டக் கல்லூரி துவக்கத் தேவையில்லை என்ற நிலையை அரசு எடுத்திருப்பது, ஏமாற்றம் அளிக்கிறது. மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, சட்டக் கல்லூரிகள் துவக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசே ஆர்வம் காட்டினால், அதிக சட்டக் கல்லூரிகளை துவக்கலாம். இல்லையென்றால், அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் தனியாரை அனுமதிக்கலாம். எனவே, சட்டத் துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி துவக்க, மனுதாரருக்கு அனுமதி அல்லது என்.ஓ.சி., வழங்க, சட்டத் துறைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இதையடுத்து, அபிலியேஷன் மற்றும் ஒப்புதல் கோரி, அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் இந்திய பார் கவுன்சிலை மனுதாரர் அணுக வேண்டியிருப்பதால், ஒரு வாரத்துக்குள் சட்டத் துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனபாலன் உத்தரவிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us