Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மயானத்தில் குப்பை கொட்டுவதால் அவதி

மயானத்தில் குப்பை கொட்டுவதால் அவதி

மயானத்தில் குப்பை கொட்டுவதால் அவதி

மயானத்தில் குப்பை கொட்டுவதால் அவதி

ADDED : ஆக 25, 2011 11:36 PM


Google News
பொள்ளாச்சி : ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், மயானத்தில் குப்பைகளை அதிகளவில் கொட்டுவதால் மக்கள் மயானம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பேரூராட்சி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு அளித்த மனு:ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், இரண்டு ஏக்கர் பரப்பில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த இடத்தை, இறந்தவர்களை புதைக்கும் மயானமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை சமீப காலமாக மயான இடத்தில் கொட்டுகின்றனர். இதனால், தற்போது நான்கு அடி உயரத்திற்கு குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் மட்டுமின்றி தனியாரும் இந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால், மயானம் அசுத்தமடைகிறது. இதனால், இறந்தவர்களை புதைக்க வழியில்லாமல் அல்லாடி வருகிறோம். எனவே, இப்பகுதியிலுள்ள குப்பையை உடனடியாக அகற்றி மயானத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்டு பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, நகராட்சிக்குட்பட்ட எல்லைக்குள் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை அப்பகுதியில் கொட்டப்படும். மயானத்திலுள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில், இப்பணி நிறைவு செய்யப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us