ADDED : ஆக 19, 2011 02:59 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, காவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்.
இவர் மே 13ம் தேதி, பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. இதுகுறித்து, அவர் பொன்னேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சின்னகாவணம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஆசாமியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 19 என்பதும், குமரேசன் பைக்கை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்து, அவரிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.


