Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?

33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?

33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?

33 ஊராட்சி தலைவர்களுக்கு "ஆப்பு' தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?

ADDED : ஜூலை 24, 2011 01:05 AM


Google News

சேலம்: சேலம் மாவட்டத்தில், திட்ட நிதியை சுருட்டிய, 33 ஊராட்சி தலைவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், 385 ஊராட்சிகள் உள்ளன.

2006 உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை, போலி கணக்கில் சுருட்டும் நடவடிக்கை அதிகம் காணப்பட்டது. பெண் தலைவர்களாக இருந்தால், அவரது கணவன்மார்கள் அங்கீகரிப்படாத தலைவர்களாக ஊராட்சிகளில் வலம் வந்தனர்.



மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவு இருந்ததால், ஊராட்சி தலைவர்களை கண்டு அதிகாரிகள் அஞ்சினர். இலவசமாக வழங்கப்பட்ட கலர் 'டிவி', காஸ் அடுப்பு, வேளாண் நிலம் போன்றவற்றை அபகரித்து, தலைவரும், வார்டு உறுப்பினர்களும் பங்கு போடும் நிலை இருந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கட்டுப்பாட்டில் இருந்த கிராம உதவியாளர்களும், இதற்கு துணைபோகினர். மற்ற மாவட்டங்களை விட, சேலத்தில் ஊராட்சி நிதியானது பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, தாசில்தார் சித்ரா தலைமையில் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, அப்போதைய கலெக்டர் சந்திரகுமார் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள, 33 ஒன்றியங்களில், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் தான் அதிக மோசடிகள் நடந்துள்ளன. பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில், பெரமனூர் தவிர மற்ற ஊராட்சிகள் அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளன.

அதேபோன்று, பெத்தநாயக்கன்பாளையத்தில், 14 ஊராட்சிகளில் முறைகேடு நடந்துள்ளது. இது தவிர, காடையாம்பட்டி, சேலம், ஓமலூர், கொளத்தூர் உள்ளிட்ட சில ஒன்றியங்களில் ஓரிரு ஊராட்சிகளில், ஒரு லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை அரசு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. அப்போதைய, சேலம் தாசில்தார் சித்ரா, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் விசாரணை மேற்கொண்டார். பாரப்பட்டி சுரேஷ்குமார் சகோதரர் குமார் உள்ளிட்ட தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் அதில் ஈடுபட்டிருந்தனர். பெயரளவுக்கு மட்டுமே நடந்த விசாரணை, வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவால் ஒத்திபோடப்பட்டது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, ஊராட்சி நிதி முறைகேடு பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில், 33 ஊராட்சி தலைவர்களும் பணத்தை சுருட்டியதை ஒப்புக்கொண்டதுடன், அவற்றை திரும்ப செலுத்திவிடுவதாக கூறியுள்ளனர்.



இது குறித்து மாஜி சேலம் தாசில்தார் சுப்பிரமணியன் கூறியதாவது: சேலம் தாசில்தாராக பணியாற்றியபோது, பனமரத்துப்பட்டி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் நடந்த முறைகேடு குறித்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தருமாறு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், வார்டு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்.

ஊராட்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது, வங்கி செக்காக தான் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், தலைவர்கள், உதவியாளர் பெயரில் செக் போட்டு, வங்கியில் இருந்து பணம் பெற்று கொடுத்ததாக கூறியிருந்தனர். அந்த தகவல், வார்டு உறுப்பினர்களுக்கு தெரியுமா என கேட்கப்பட்டது. 20 ஆயிரம் ரூபாய் முதல் பணம் அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய அறிக்கையை, உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) வசம் ஒப்படைத்து விட்டேன். பிரச்னையில், சிக்கியவர்கள் ஜனவரி மாதம் பணத்தை திரும்ப செலுத்தியதாக கூறப்படுகிறது.

மோசடி இருக்கும்பட்சத்தில், அவர் பதவி பறிக்கப்படுவதுடன், இரண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படலாம். ஊராட்சி உதவி இயக்குனர் தான் அது குறித்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சேலம் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) மைக்கேலிடம் கேட்டபோது, ''அதுப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆய்வுப்பணியில் உள்ளேன். எந்த புகார் என்று ஞாபகம் வரவில்லை. ஆஃபீஸூக்கு சென்ற பின் கூறுகிறேன்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us