ஊட்டியில் "புட் பிளேட் ஜர்னி' ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
ஊட்டியில் "புட் பிளேட் ஜர்னி' ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
ஊட்டியில் "புட் பிளேட் ஜர்னி' ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
ADDED : ஜூலை 13, 2011 12:56 AM

ஊட்டி : நீலகிரி மலை ரயிலின் செயல்பாடுகள் குறித்து, சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், 'புட் பிளேட் ஜர்னி' திட்டத்தை செயல்படுத்த, ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
நீலகிரி மலை ரயில், நூற்றாண்டை கடந்து இயங்குவதால், பாரம்பரிய சின்னமாக, 'யுனெஸ்கோ' அறிவித்தது. தென்னாப்பிரிக்க தலைநகர் டர்பனில், உலக பாரம்பரிய குழுவினர், 2005ம் ஆண்டு ஜூலை, 19ம் தேதி நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அதிகார பூர்வமாக அறிவித்தனர்.
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட நீலகிரி மலை ரயில், கடந்த சில ஆண்டுகளாக பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. தரமற்ற நிலக்கரி, இழுவை திறன் குறைவு ஆகிய காரணங்களால், தனது இயக்கத்தை பாதியில் முடித்து விடுகிறது. இதனால், மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள், நடுக்காட்டில் தவித்து வருவது, வாடிக்கையாகி விட்டது. நீலகிரி மலை ரயிலை, புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என, பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலை ரயில் குறித்து அறிந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
'புட் பிளேட் ஜர்னி' என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ், நீராவி இஞ்சினை திறந்த வேகன் மூலம், இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி ரயில் நிலையத்தின், ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு இயக்கப்படும் ரயில் இஞ்ஜினின் செயல்பாடுகளை, பயணிகள் கண்டறிய அனுமதிக்கப்படுவர். இதற்காக, கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயில் பயணத்தை பிரபலப்படுத்தும் வகையில், ரன்னிமேடு நிறுத்தத்தில் ரயிலை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.