ஆட்களுடன் விபத்தில் சிக்கும் சரக்கு வாகனங்களுக்கு இழப்பீடு கிடையாது
ஆட்களுடன் விபத்தில் சிக்கும் சரக்கு வாகனங்களுக்கு இழப்பீடு கிடையாது
ஆட்களுடன் விபத்தில் சிக்கும் சரக்கு வாகனங்களுக்கு இழப்பீடு கிடையாது
ADDED : ஆக 13, 2011 03:04 AM
மதுரை : விதிமுறைக்கு மீறாக, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்று விபத்துக்குள்ளானால், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு கிடைக்காது என, மதுரையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது அடிக்கடி நடக்கிறது. இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மதுரையில் போலீஸ் சார்பில் நேற்று சரக்கு வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போக்குவரத்து உதவிகமிஷனர்கள் மகுடபதி, எல்லப்பராஜ் வரவேற்றனர். இன்சூரன்ஸ் அதிகாரிகள் தென்னரசு, ராமச்சந்திரன், ரவி, ஆர்.டி.ஓ.,க்கள்
ரவிச்சந்திரன், தாமஸ் ஆகியோர் பேசியதாவது : 1994ல் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டப்படி, சரக்கு வாகனங் களில் ஆட்களை ஏற்றக்கூடாது. ஆட்களுடன் விபத்தில் சிக்கினால், இழப்பீடு தர தேவையில்லை. லோடுமேன்கள் ஆறு பேர் மற்றும் சரக்கிற்கு உரிமை உடையவர் மட்டுமே வாகனத்தில் செல்ல வேண்டும். விபத்து ஏற்பட அவசரம், அஜாக்கிரதை தான் முக்கிய காரணம். விபத்தை தடுக்க இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது, என்றனர்.
கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன் பேசியதாவது : மாவட்டத்தில் ஆண்டுதோறும் 600 சாலை விபத்துகள் நடக்கின்றன. தினமும் இருவர் இறக்கின்றனர். எல்லா வழக்குகளுக்கும் இன்சூரன்ஸ் கிடைப்பதில்லை. திருவிழா, மாநாட்டிற்கு சரக்கு வாகனங்களிலும், மேற்கூரை மீதும் அமர்ந்தும் வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது; விபத்தில் சிக்கக்கூடாது என்ற அக்கறையுடன் அவர்களை தடுத்தால் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும், என்றார்.ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.