சீனாவிலும் "கரன்ட் கட்'டுக்கு புல்லட் ரயிலும் தப்பவில்லை
சீனாவிலும் "கரன்ட் கட்'டுக்கு புல்லட் ரயிலும் தப்பவில்லை
சீனாவிலும் "கரன்ட் கட்'டுக்கு புல்லட் ரயிலும் தப்பவில்லை
ADDED : ஜூலை 13, 2011 12:42 AM
பீஜிங்:சீனாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புல்லட் ரயில், மின்சார தடை காரணமாக, பல மணிநேரம் தாமதமாகச் சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.சீனாவில், தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே, கடந்த ஜூன் 30ம் தேதி, அதிவேக புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஷாங்காயிலிருந்து ஆயிரத்து 318 கி.மீ., தூரத்தில் உள்ள பீஜிங் நகரத்திற்கு, இந்த ரயில் 5 மணி நேரத்தில் சென்றடையும். மற்ற ரயில்களில் 10 மணி நேரம் ஆகும். குறைவான கட்டணத்தில், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணம் என்பதால், மக்களிடையே இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்த புல்லட் ரயிலால், விமான நிறுவனங்கள் கலக்கமடைந்தன. இந்நிலையில், சீனாவில் பெய்து வரும் புயல் மழை காரணமாக, நேற்று முன்தினம், புல்லட் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக, மின்தடை ஏற்பட்டு, புல்லட் ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. மேலும், அந்த தடத்தில் இயக்கப்பட்ட 19 ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. 90 நிமிடங்கள் நீடித்த மின் தடை காரணமாக, 5 மணி நேரத்தில் சென்று சேர வேண்டிய புல்லட் ரயில் பல மணி நேரம் தாமதமாக சென்றது.இதுதவிர, புல்லட் ரயில் பல்வேறு நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
இதில், மின் தடை காரணமாக, 'ஏசி'யும் இயங்கவில்லை. ரயில் கதவுகளை திறக்க முடியாமல், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மின்தடை நீங்கினாலும், வழியில் ஆங்காங்கே நின்று, நின்றுதான் அன்றைய பயணத்தை புல்லட் ரயில் நிறைவு செய்தது. இதனால், இந்த புல்லட் ரயில், பயணிகளின் உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.அன்றைய தினம், புல்லட் ரயிலில் பயணம் செய்த பயணிகளில் பலரும், 'பேஸ்புக்', 'ப்ளாக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக, தங்களது கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர்.