குளச்சல் துறைமுக திட்டத்துக்கு நிதிஉதவி மத்திய அரசு கைவரிப்பு: முதல்வர் தகவல்
குளச்சல் துறைமுக திட்டத்துக்கு நிதிஉதவி மத்திய அரசு கைவரிப்பு: முதல்வர் தகவல்
குளச்சல் துறைமுக திட்டத்துக்கு நிதிஉதவி மத்திய அரசு கைவரிப்பு: முதல்வர் தகவல்
ADDED : செப் 08, 2011 12:03 AM
சென்னை: ''குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு நிதி தராமல், மத்திய அரசு கோப்புக்களை திருப்பி அனுப்பிவிட்டது,'' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், பிரின்ஸ் (காங்.,) பேசும்போது, ''குமரி மக்களின் எதிர்பார்ப்பான குளச்சல் துறைமுகத்தை அரசு மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். மத்திய அரசு நிதி தர தயாராக உள்ளது. அரசு முயற்சிக்குமா?'' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ''குளச்சல் துறைமுகத்தை சரக்கு பெட்டகங்கள் கையாளும் அளவுக்கு மேம்படுத்த முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை. தொழில்நுட்ப வசதிகள், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, 67வது கடல் சார் வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.
மீண்டும் எழுந்த பிரின்ஸ், ''நிதி தர மத்திய அரசு தயாராக உள்ளது,'' என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட, முதல்வர் ஜெயலலிதா, ''குளச்சல் துறைமுகம் அமைக்க, மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டபோது, நிதி தராமல், மாநில அரசே பார்த்துக் கொள்ளுங்கள் என திருப்பி அனுப்பிவிட்டது. மத்திய அரசில், தமிழகத்தைச் சேர்ந்த வாசன் தான் கப்பல் துறை அமைச்சராக உள்ளார். உறுப்பினர் பிரின்ஸ், உரிமையுடன் அவரிடம் பேசி, நிதியை பெற்றுத் தந்தால், பணிகள் உடனே மேற்கொள்ளப்படும்,'' என்றார்.