ADDED : ஆக 11, 2011 11:39 PM
ஈரோடு: 'தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில், தமிழ்நாடு அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என்று அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மோகன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.
வேளாண்மை, கல்வி, மின்சாரம் என, அனைத்து துறைகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. கட்டமைப்பு துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் தலைமையில், 'தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிட பொறியாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாடு அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும், தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.