/உள்ளூர் செய்திகள்/மதுரை/குத்துச்சண்டை போட்டிக்கு காமராஜ் பல்கலை அங்கீகாரம் தேவைகுத்துச்சண்டை போட்டிக்கு காமராஜ் பல்கலை அங்கீகாரம் தேவை
குத்துச்சண்டை போட்டிக்கு காமராஜ் பல்கலை அங்கீகாரம் தேவை
குத்துச்சண்டை போட்டிக்கு காமராஜ் பல்கலை அங்கீகாரம் தேவை
குத்துச்சண்டை போட்டிக்கு காமராஜ் பல்கலை அங்கீகாரம் தேவை
ADDED : ஆக 28, 2011 12:41 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை விளையாட்டுகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
ஒலிம்பிக்கில் தற்போது பெண்கள் குத்துச்சண்டை போட்டிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் புதிய விளையாட்டுகளின் கீழ் 2003 முதல் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வரை தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மதுரை காமராஜ் பல்கலை விளையாட்டுப் போட்டிகளில், குத்துச்சண்டை போட்டி இதுவரை சேர்க்கப்படவில்லை. இதனால் விளையாட்டு கோட்டாவில் குத்துச்சண்டை மாணவர்களின் சேர்க்கை குறைகிறது. கல்லூரியில் இடம் கிடைத்தால் கூட, பல்கலையில் போட்டிகள் நடத்தாததால், குத்துசண்டை பயிற்சி பெறுவதையும் கல்லூரிகள் நிறுத்தி விடுகின்றன. திறந்தவெளி போட்டிகள், சர்வதேச போட்டிகளுக்கு வாய்ப்பிருந்தும், அனுமதி மறுக்கப்படுகிறது. குத்துச்சண்டைக்கு பதிலாக பளு தூக்குதல், கபடி போட்டிகளில் விளையாடும்படி வீரர்கள் வற்புறுத்துகின்றனர். ஆறாம் வகுப்பிலிருந்து ஆறாண்டுகள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று, திடீரென வேறு விளையாட்டில் ஈடுபடுவது கஷ்டம். குத்துச்சண்டை கழக செயலாளர் பாஸ்கரசெழியன் கூறுகையில், ''எட்டாண்டுகளாக பள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறேன். மாவட்ட, மாநில போட்டிகளில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஆறாண்டு உழைப்பின் மூலம் தேசியளவில் தகுதி பெறுகின்றனர். கல்லூரியில் சேர்ந்த பிறகு, விளையாட்டு வாழ்க்கை முடிவது தான் வேதனை. எங்களது தொடர் பயிற்சியும், மாணவர்களின் உழைப்பும் வீணாகிறது. சென்னை அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள், பாரதிதாசன், பாரதியார் பல்கலைகழகங்களிலும் இந்த விளையாட்டு உள்ளது,'' என்றார். காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சத்யா கூறுகையில்,'' குறைந்தது பத்து கல்லூரிகளிலாவது குத்துச்சண்டை மாணவர்கள் இருந்தால் போட்டி நடத்த முடியும். பொதுக்குழு கூட்டத்தில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் இதை வலியுறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


