
மத்திய அமைச்சர் அம்பிகா சோனி: கர்நாடக மாநில லோக் ஆயுக்தா கோர்ட், அம்மாநில முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளது.
டவுட் தனபாலு: ஈராக் எண்ணெய் பேர ஊழல் வழக்குல, உங்க கட்சித் தலைவி மேலயும் தான் குற்றச்சாட்டு கிளம்பிச்சு... மனசாட்சிப்படி நடந்துக்கிட்டு, உடனே பதவியில இருந்து விலகிட்டாங்களா...? நட்வர் சிங்கை மட்டும் நட்டாற்றுல விட்டுட்டு, நழுவிடலையா...!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சங்க காலத்தில் இளைஞர்கள் போருக்கு போனார்கள். இப்போது, 'பாரு'க்கு போகின்றனர். படிக்கும் பிள்ளைகள் டாஸ்மாக் கடைக்கும், பாருக்கும், சினிமாவுக்கும் போகின்றனர். அதனால் தான் தமிழ்நாடு என்ற பெயரை, 'குடிகார நாடு என்ற தமிழ்நாடு' என மாற்றும்படி சொல்கிறேன்.
டவுட் தனபாலு: அப்படி மாத்தணும்னு சொன்ன கையோட, தமிழகத்துல முதல் முறையா பூரண மதுவிலக்கை ரத்து பண்ணவர் கூடவே போய் கூட்டணி வச்சீங்களே... அப்போ உங்களுக்கு, 'குடிகார நாட்டை ஆதரிச்ச, குடிக்காத தலைவர்'னு பெயர் வைக்கலாமா...?
பத்திரிகைச் செய்தி: தற்போது நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, 28.17 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில், 36.87 சதவீதம் பேர் பெண்கள். 50 சதவீத இட ஒதுக்கீடுச் சட்டம் அமலுக்கு வந்தால், கூடுதலாக, 14 லட்சம் பெண்கள், பஞ்சாயத்து அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
டவுட் தனபாலு: ஹுக்கும்... 'கூடுதலாக, 14 லட்சம் பெண்களின் கணவன்கள், கட்டப்பஞ்சாயத்து பண்ணுவார்கள்'னு சொல்லுங்க...!