/உள்ளூர் செய்திகள்/சென்னை/உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் பலனளிக்காத அதிகாரப் பகிர்வுஉள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் பலனளிக்காத அதிகாரப் பகிர்வு
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் பலனளிக்காத அதிகாரப் பகிர்வு
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் பலனளிக்காத அதிகாரப் பகிர்வு
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல் பலனளிக்காத அதிகாரப் பகிர்வு
ADDED : ஆக 21, 2011 02:23 AM
சென்னை : சென்னை பெருநகருக்கு வெளியே, இதர மாவட்டங்களில் கட்டட அனுமதி வழங்க, உள்ளாட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு, முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதனால், மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக புகார் கூறப்படுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, சி.எம்.டி.ஏ., உள்ளது போன்று, இதர நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குட்பட்ட இடங்களில், கட்டட அனுமதி, மனைப் பிரிவுகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகள், நகர், ஊரமைப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு, சென்னையில் தலைமையகமும், 4 மாவட்டங்களுக்கு ஒரு துணை இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது.கட்டட அனுமதி, மனைபிரிவு அங்கீகாரம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நகர், ஊரமைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.இது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியரும், நகர், ஊரமைப்புத்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், குழு ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும். இதில், ஏதாவது குழப்பம் ஏற்பட்டால், இறுதி முடிவுக்காக, அந்த மனுக்கள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.இதில், ஏற்பட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக, பிற மாவட்டங்களில், கட்டட அனுமதிக்கும், மனைபிரிவுகளின் அங்கீகாரத்துக்கும் மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 'சென்னை பெருநகருக்கு வெளியே, தமிழகத்தின் ஏனைய பகுதிகளில், நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு, திட்ட அனுமதி வழங்க, உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்' என கடந்தாண்டு அரசு அறிவித்தது. கடந்தாண்டு ஜூன் மாதம் இது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால், இப்போது வரை குறிப்பிட்ட சில மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் மட்டுமே, இந்த அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.பிரச்னை என்ன?பெரும்பாலான மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் இந்த அதிகாரப்பகிர்வு, இன்னமும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்டட அனுமதி கோரும் ஆயிரக்கணக்கான விண்ணப்ப மனுக்கள் தேங்கியுள்ளன.இது தொடர்பாக, தமிழ்நாடு அடுக்ககம் கட்டுவோர் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மணிசங்கர் கூறியதாவது:கட்டட அனுமதியளிக்கும் விவகாரத்தில், நிர்வாக நடைமுறையில் உள்ள சிக்கல் காரணமாக, ஏராளமான விண்ணப்ப மனுக்கள் தேக்கமடைந்துள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாக அரசு கூறினாலும், எல்லாப் பணிகளும் உள்ளாட்சி அளவிலேயே முடிவதில்லை.இதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்துக்கே அளிக்கப்படுகிறது.நகர், ஊரமைப்புத் துறையின் துணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும்.திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் மண்டல அளவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், கட்டட அனுமதி, மனைப்பிரிவு அங்கீகாரம் ஆகியவை தொடர்பான நடைமுறைகளை கணினிமயமாக்க வேண்டும். சர்வே எண்கள் அடிப்படையில் அனைத்து நிலங்களுக்கான பயன்பாட்டு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு மணிசங்கர் கூறினார்.தீர்வு எப்போது?இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, நகர், ஊரமைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு முடிவெடுப்பதை விரைவுபடுத்தவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள், தொழில் நுட்பப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பங்கள் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளும் சேவை தொழில்நுட்பக் காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
வி.கிருஷ்ணமூர்த்தி


