Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/புதிய தலைமைச் செயலக வளாக விநாயகர் கோவிலை சீரமைக்க முதல்வர் உத்தரவு

புதிய தலைமைச் செயலக வளாக விநாயகர் கோவிலை சீரமைக்க முதல்வர் உத்தரவு

புதிய தலைமைச் செயலக வளாக விநாயகர் கோவிலை சீரமைக்க முதல்வர் உத்தரவு

புதிய தலைமைச் செயலக வளாக விநாயகர் கோவிலை சீரமைக்க முதல்வர் உத்தரவு

ADDED : ஜூலை 11, 2011 10:48 PM


Google News
Latest Tamil News

சென்னை : புதிய தலைமைச் செயலகத்துக்காக அகற்றப்பட்ட, விநாயகர் கோவிலை புனரமைத்து, பரிவார மூர்த்திகளை ஆகம விதிப்படி மீண்டும் நிர்மானம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இப்பணிகளை இந்த ஆண்டுக்குள் முடிந்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், ஆலமர விநாயகர் கோவில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆலமரத்தின் அடிப்பாகத்தில் இயற்கையாகவே விநாயகர் எழுந்தருளியுள்ளதால், 'ஆலமர இயற்கை விநாயகர்' என்ற பெயர் வந்தது.

அரசினர் தோட்டத்தில் தமிழக புதிய சட்டசபை வளாகம் கட்ட, இக்கோவில் அமைந்துள்ள இடம் தேவை என்பதால், இக்கோவிலை மாற்றியமைக்க கடந்த அரசு ஆராய்ந்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு குறித்து விசாரித்த முதல் டிவிஷன் பெஞ்ச், மனுதாரர், பொதுப்பணித் துறை செயலரிடம் அளித்துள்ள மனுவை பரிசீலித்து உத்தரவிடுமாறு, தீர்ப்பளித்தது. முந்தைய அரசு, அரசினர் தோட்டத்தில் விநாயகர்÷ காவிலில் உள்ள இயற்கையாக தோன்றிய ஆலமர விநாயகரை அப்படியே விட்டுவிட்டு, அதைச் சுற்றிலும் ஆறு அடி சுற்றளவுக்கு வேலி அமைத்துக் கொடுக்கவும், 2,400 சதுர அடி இடத்தை பெயரளவு வாடகையில் ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டது.

இக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில், அறநிலையத்துறையே அவர்களது நிதி ஆதாரத்தில் இருந்து, கோவிலை கட்டிக் கொள்ள வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சுற்றியிருந்த விஷ்ணு, துர்கை, சரஸ்வதி, அய்யப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் போன்ற, 23 பரிவார மூர்த்திகளை அகற்றி, பொதுப்பணித் துறை ஒதுக்கீடு செய்த இடத்தில், கடந்த 2008 டிசம்பர் மாதம் வைக்கப்பட்டது.

இயற்கை ஆலமர விநாயகர் ஒரு இடத்திலும், இதர பரிவார மூர்த்திகள் வேறு இடத்திலும் அமைவது, வழிபாட்டுக்கு உகந்ததல்ல என்று பக்தர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இக்கோவிலை புனரமைக்கவும், பரிவார மூர்த்திகளை ஆகம விதிப்படி மீண்டும் நிர்மானம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பரிவார மூர்த்திகளை நிர்மானிக்கவும், கருவறை, நுழைவாயில், அம்பாள் சமேத சிவன், நவக்கிரக சன்னிதி ஆகியவற்றை அமைப்பதோடு, மேற்கூரையும், தரைத்தளமும் அமைக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வலம் வந்து வழிபடத்தக்க வகையில், 18.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகளை உடனே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பீட்டுத் தொகையான 18.50 லட்சம் ரூபாயும் இந்து சமய அறநிலையத் துறை பொது நல நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us