ஆசிரியர் தினத்தை அவமதித்தவர்கள் மீதுதமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஆசிரியர் தினத்தை அவமதித்தவர்கள் மீதுதமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
ஆசிரியர் தினத்தை அவமதித்தவர்கள் மீதுதமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடலூர்:ஆசிரியர் தினத்தை அவமதிக்கும் வகையில், 'கறுப்பு பேட்ஜ்' அணிந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வளமான இந்தியாவை உருவாக்குவதில், முக்கியப் பங்கு வகிப்பது ஆசிரியர் பணி.
தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆசிரியராகப் பணியாற்றி, நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் பணியில் அவர் கொண்ட ஈடுபாடு காரணமாக, அவர் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.ஆசிரியர்கள், தங்களுக்குள்ள பொறுப்பினையும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் உணர்த்துகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதுடன், நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்றவற்றையும் போதிப்பது தலையாய கடமை.மாணவர்களுக்கு நேரம் தவறாமையைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும் என்று, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவை, தினமும் காலை 9.30 மணிக்கு எஸ்.எம்.எஸ்.,சில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய உத்தரவிட்டார். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வரத் துவங்கியதால், இத்திட்டம் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதன் உச்சகட்டமாக, ஆசிரியர் பணிக்குப் பெருமை சேர்த்த முன்னாள் ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை அவமதிக்கும் வகையில், சில ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர்.அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமுதாய நலன் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.