
தமிழக வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு: உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்து வழங்குவதில் பல்வேறு இடர்கள் உள்ள சூழ்நிலையில், வேளாண்துறையில் விஞ்ஞான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உணவு உற்பத்தியை பெருக்க விவசாயிகள் முன் வர வேண்டும்.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு பேச்சு: இயற்கை வளங்களை குறிப்பாக வனத்தை அழிக்க விடாமல், போராடினால், அதை பயங்கரவாதம் என முத்திரை குத்தி பயங்கரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லி பெரிதுபடுத்தி சூழ்ச்சி செய்கின்றனர். இயற்கையை நாம் சூறையாடினால், இயற்கை நம்மை அழித்துவிடும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: அறிவைப் பெற தேடிச் செல்ல வேண்டும். தோல்வியை தோல்வியடைச் செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்கள் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். நம் நாட்டில், 60 கோடி இளைஞர்கள் தான் மிகப் பெரிய சொத்து. அவர்கள் நல்ல மனிதர்களாக வர வேண்டும்.
பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா பேட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கோர்ட்டில் ராஜா தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, சிதம்பரத்தையும் விசாரணை செய்ய வேண்டும்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் பேட்டி: அலைக்கற்றை ஒதுக்கீட்டில், பிரதமர் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கும் சம பொறுப்பு உள்ளது, தெரியவந்துள்ளது. ஆனால், இப்போது ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள பங்கு மற்றும் பொறுப்பை தட்டிக் கழிப்பதில் தீவிரமாக உள்ளனர். இது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் என்றும், கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பா.ஜ., வலியுறுத்தும்.
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி பேச்சு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை உயரும் போது, டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் பொருட்களின் விலை குறையும் போது, டீசல் விலையை குறைப்பதில்லை. தொடர்ந்து, உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலை உயர்வால், லாரி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.


