ADDED : செப் 03, 2011 12:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இலவச லேப்-டாப் பெற 14 ஆயிரத்து 464 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ்2 படிப்பவர்கள். அரசு உதவிபெறும் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், அரசு சார்பில், இலவச, 'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை, அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். இத்திட்டத்துக்காக, தமிழக பட்ஜெட்டில் 912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2011-12ம் ஆண்டில், ப்ளஸ் 2 மாணவர்களுக்கும், கலைக் கல்லூரியில் பயிலும் முதல், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான கண்காணிப்பு குழுவில், மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அண்ணா பல்கலை டீன், அரசு கல்லூரி முதல்வர், உதவி பெறும் பாலிடெக்னிக் அல்லது அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இடம்பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகள் கணக்கெடுப்பு நடந்தது. பள்ளிகள் அளவில் 14 ஆயிரத்து 464 பேர் தகுதியானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு விபரம் இனிமேல் தெரியவரும்.