மாஜி மந்திரி 9 நிமிடம் காத்திருந்து கையெழுத்து: இன்முகத்தோடு வரவேற்று, வழியனுப்பிய போலீஸ்
மாஜி மந்திரி 9 நிமிடம் காத்திருந்து கையெழுத்து: இன்முகத்தோடு வரவேற்று, வழியனுப்பிய போலீஸ்
மாஜி மந்திரி 9 நிமிடம் காத்திருந்து கையெழுத்து: இன்முகத்தோடு வரவேற்று, வழியனுப்பிய போலீஸ்

சேலம்: சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று 2வது நாளாக ஆஜரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் காத்திருந்து கையெழுத்துப் போட்டு விட்டு வெளியேறினார்.
சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 'மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.
உதவி கமிஷனருக்கு 'மெமோ': வீரபாண்டி ஆறுமுகம், முதல்நாள் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்கள் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது, உதவி கமிஷனர் காமராஜ் பாரபட்சமாக நடந்து கொண்டதாக, அவர் மீது, மாநகர கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உதவி கமிஷனரிடம் விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.