Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இறைச்சிக் கடைகளில் சுகாதார கேடு :குறிச்சி நகராட்சி கவனிக்குமா?

இறைச்சிக் கடைகளில் சுகாதார கேடு :குறிச்சி நகராட்சி கவனிக்குமா?

இறைச்சிக் கடைகளில் சுகாதார கேடு :குறிச்சி நகராட்சி கவனிக்குமா?

இறைச்சிக் கடைகளில் சுகாதார கேடு :குறிச்சி நகராட்சி கவனிக்குமா?

ADDED : ஜூலை 13, 2011 02:10 AM


Google News
குறிச்சி : சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கடைகளை நடத்துவோர் மீது, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி இறைச்சி விற்பனை கடைகள் உள்ளன. நாளுக்கு நாள் இக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே வேளையில், இக்கடைகள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் நடத்தப்படுகின்றன. பஸ் ஸ்டாப் அருகே, சாக்கடைநீர் கால்வாய் அருகே என, தங்களுக்கு சவுகரியமான இடங்களில் கடைகளை வைத்துள்ளனர். ஒரு சில கடைகள் வாரத்தில் ஒரு நாள் மட்டும், மரங்களின் கீழே நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆத்துபாலம் பஸ் ஸ்டாப், போத்தனூர் - நஞ் சுண்டாபுரம் ரோடு, வெள்ள லூர், செட்டிபாளையம் ரோடு, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, ஈச்சனாரி என பல இடங் களிலும் உள்ள இறைச்சிக் கடைகள் சுகாதாரமற்ற முறையிலேயே நடத்தப் படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் இறைச்சிக்கு, மாநகராட்சி முத்திரை வைக்கப்படுகிறது; நோய் வாய்ப்பட்டு இறந்த ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவை அறுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இவ்வாறு விற்பனை செய்வதை தடுக்க நாள் தோறும் முத்திரை வெவ்வேறு விதமாக வைக்கப்படுகிறது. இடையிடையே சுகாதார அலுவலர் அதிரடி சோதனையும் நடத்துகிறார்.பெரும்பாலான விற்பனையாளர்கள், தாங்கள் கடை வைத்துள்ள இடத்தி லேயே அறுத்து, விற்பனை செய்கின்றனர். சிலர் விபத்தில் பலியாகும் உயிரினங்களை அறுத்து, மறுநாள் விற்பனை செய்கின்றனர். இறைச்சியின் கழிவுகள் கடை அருகிலேயே கொட்டப்படுகின்றன. ரோட்டின் அருகில் உள்ள கடைகளில், தொங்கும் இறைச்சி மீது, அவ்வழியே செல்லும் வாகனங்களால் ஏற்படும் புழுதி படர்கிறது. கண்ணுக்கு தெரியாமல் படரும் இதை, வாங்கு வோரும் கண்டுகொள்வ தில்லை. எங்கிருந்தோ பரந்து வரும் ஈ, கொசு போன்றவை இறைச்சி மீது உட்காருகின் றன. தொற்று நோய் பிரச்னை, சுற்றுப்புற சுகா தாரம் பாதிப்பு போன்றவை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சித் தலைவர் பிரபாகரன் கூறியதாவது: இறைச்சி கடைகளை நடத்துவோர், சுகாதாரமான இடத்தில், இறைச்சிகளை பாதுகாப்பாக கண்ணாடி கூண்டு, வலை போன்ற வற்றுள் வைக்கவேண்டும். தற்போது நகராட்சியில், நவீன வசதிகளுடன் கூடிய மாடு அறுவைக்கூடம் உள்ளது; இதற்கு மட்டுமே முத்திரையிடப்படுகிறது. ஆடு, கோழி போன்றவை அறுக்க, ஸ்லாட்டர் ஹவுஸ் விரைவில் அமைக்கப்படும். முக்கிய இடத்தில் அனைத்து இறைச்சிக்கடை களையும் அமைப்பதற்கான இட வசதி கிடையாது; விற்பனையாளர்கள் ஆங்காங்கே கடை வைத் துள்ளனர். மாநகராட்சியுடன் விரைவில் இணையும் பட்சத்தில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த இயலும்.இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.

சித்திரைச்சாவடியில் குடிமகன்கள் நித்திரை 'திறந்தவெளி பார்' ஆக மாறிய அவலம்

பேரூர் : சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதி 'திறந்தவெளி பார்' ஆக மாறி வருவதால் இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டு சித்திரைச்சாவடி. அணையின் மொத்த நீளம் 282.11 மீட்டர். இதனால், 3, 791 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து வாய்க்கால்களில் பிரிக்கப்படும் தண்ணீர், கோவையின் நீராதாரமாக விளங்கும் 28 குளங்களை நிரப்புகிறது. கடந்த சில மாதங்களாக சித்திரைச்சாவடி அணைப் பகுதி, 'திறந்தவெளி பார்' ஆக மாறி வருகிறது. காலை முதல் இரவு வரை, கார் மற்றும் பைக்கில், கோவை மற்றும் உள்ளூர் பகுதியிலிருந்து கும்பல், கும்பலாக வரும் இளைஞர் பட்டாளங்கள், அணையின் ஓரம் மற்றும் மதகு பகுதிகளில் அமர்ந்து ஜாலியாக மது அருந்துகின்றனர். அணைப் பகுதிக்குள், மது, மினரல் வாட்டர், கூல்டிரிங்ஸ் பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசி எறிகின்றனர். அணையின் நாலாபுறமும் ஏராளமான காலி பாட்டில்கள் பரவிக் கிடக்கின்றன. வரும்போது, ஒன்றாக வருபவர்கள் குடித்துவிட்டு போதையேறிய நிலையில், தகராறு செய்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த 5ம் தேதி முதல், கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளதால், அருவிக்குச் செல்ல முடியாமல் திரும்பும் இளைஞர்கள், மதுபாட்டில்களுடன் சித்திரைச்சாவடி அணைக்கு வருகின்றனர். பல மணிநேரம் அணைப்பகுதியில் அமர்ந்து குடித்து விட்டு கும்மாளமிடுகின்றனர்; பணம் வைத்து நடக்கும் சீட்டாட்டமும் 'களை' கட்டியுள்ளது. அணையின் வடக்கு பக்கத்திலுள்ள விவசாயிகள், அணையைக் கடந்து சிறுவாணிரோட்டுக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் இச்செயலால், சுற்றுப்புற விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது,'அணைப்பகுதிக்குள் வெளியாட்கள் அத்துமீறி நுழைந்து மது அருந்துவதாக புகார் வந்துள்ளது. போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us