மனைவி, மகன் கொலை வழக்கில் திருப்பம் : கணவர் தற்கொலை முயற்சி
மனைவி, மகன் கொலை வழக்கில் திருப்பம் : கணவர் தற்கொலை முயற்சி
மனைவி, மகன் கொலை வழக்கில் திருப்பம் : கணவர் தற்கொலை முயற்சி
ADDED : செப் 21, 2011 01:08 AM
மதுரை: மதுரையில் நகை, பணத்திற்காக தாய், மகன் கொலையான வழக்கில், எந்த 'க்ளூ'வும் கிடைக்காத நிலையில், நேற்று கணவர் விஜயகுமார் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை காமராஜர் ரோடு நவரத்னபுரம் 2வது தெருவில் வசிப்பவர் டெய்லர் விஜயகுமார், 38. மனைவி துர்காதேவி, மகன் ஸ்ரீராமுடன் முதல் தளத்தில் வசித்தார். கீழ்தளத்தில் சகோதரர் ஜெயக்குமார் குடும்பம் வசிக்கிறது. செப்.,12 இரவு 9.30 மணிக்கு பத்தரை பவுன் நகை மற்றும் ரூ.86 ஆயிரத்திற்காக துர்காதேவியையும், ஸ்ரீராமையும் மர்மநபர்கள் கழுத்தறுத்து கொலை செய்தனர்.
இவ்வழக்கில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கும் நிலையில் இதுவரை எந்த 'க்ளூ'வும் கிடைக்கவில்லை. விஜயகுமாரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது. அப்போது, 'தனது தொழிலும் போச்சு. குடும்பமும் போச்சு' என புலம்பியுள்ளார். நேற்று முன் தினம் மாலைதான் வீட்டுச் சாவியை விஜயகுமாரிடம் போலீசார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, வீட்டில் தங்கிய விஜயகுமார், மனைவி, மகனை நினைத்து அழுது, நேற்று மாலை 4.45 மணிக்கு மாடியில் இருந்து குதித்தார். அவரது அலறலை கேட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.