மதுரை ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: எஸ்ஸார் கோபி சகோதரர் உட்பட மூவர் சரண்
மதுரை ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: எஸ்ஸார் கோபி சகோதரர் உட்பட மூவர் சரண்
மதுரை ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: எஸ்ஸார் கோபி சகோதரர் உட்பட மூவர் சரண்
ADDED : ஆக 01, 2011 10:46 PM

மதுரை: மதுரையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன், 29, உட்பட மூவர் சரணடைந்தனர்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன்.
இவர், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு அலுவலகம் அமைக்க இடம் கொடுத்து உதவினார். இதை எஸ்ஸார் கோபி எதிர்த்தார். இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அவனியாபுரம் பெரியார் நகர் - ஈச்சனோடை அருகே கடந்த 2009 ஏப்.,16ல் பாண்டியராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது கணவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக மனைவி பாண்டீஸ்வரி, தாயார் லட்சுமி போலீசாரிடம் புகார் கூறினர். போலீஸ் விசாரணையில் பாண்டியராஜனை, எஸ்ஸார் கோபி, அவரது சகோதரர்கள் மருது, ஈஸ்வரன் உட்பட 13 பேர் சம்பவத்தன்று கடத்தி சென்று, அடித்து கொலை செய்து, மூன்று கார்களை உடல் மீது ஏற்றி சிதைத்து, விபத்தில் இறந்ததாக கொலையை மறைத்தது தெரியவந்தது. இவ்வழக்கில் எஸ்ஸார் கோபி, செந்தில்குமார், அவனியாபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மணிகண்டன், பாண்டி ஆகியோரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரன், குட்டி (எ) ராஜரத்தினம், 27, காதர் நவாஸ், 28, ஆகியோர், மதுரை ஆறாவது ஜெ.எம்., கோர்ட்டில், நேற்று சரணடைந்தனர். அவர்களை, ஆக.,15 வரை ரிமாண்ட் செய்து, மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார். தலைமறைவான மருது உட்பட எட்டு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.