PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

தமிழக அரசு செய்திக் குறிப்பு: சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ஆலமரத்தடி விநாயகரையும், பரிவார மூர்த்திகளையும், வழிபடத்தக்க வகையில், 18.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
டவுட் தனபாலு: ரொம்ப நல்ல காரியம்... இதைச் செய்யறதுக்கு முன்ன, கேட்க நாதியில்லாம இருக்கற ஏகப்பட்ட திவ்ய தேசங்கள், பாடல் பெற்ற தலங்கள்ல ஒரு வேளை பூஜைக்காவது ஏற்பாடு பண்ணா புண்ணியமாப் போகும்... ஆலமரத்தடி இயற்கை விநாயகருக்கு, 50 வயசு தான்... இந்தக் கோவில்களுக்கு, 500 வயசுக்கும் மேல...!
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர்களை மாற்றியதைத் தவிர எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை என நான் பேசியதாக சில, தின, வார இதழ்களில் வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன்.
டவுட் தனபாலு: அவங்க எதையாவது எழுதிட்டுப் போகட்டும்; விடுங்க... இந்தக் கூட்டணியில உங்க இடத்தைப் பிடிக்க ஆயிரம் பேர் காத்துட்டு இருக்கற நிலையில, இந்த மாதிரியெல்லாம் பேச மாட்டீங்கன்னு மக்களுக்கே தெரியாதா...?
தமிழக காங்., தலைவர் தங்கபாலு: தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மற்றும் சிறுபான்மையின மக்களுள் பொருளாதாரத்தில் நலிந்துபோன அப்பாவி மாணவர்கள், பெரும்பாலும், அரசு வேலை வாய்ப்புக்காகவே காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
டவுட் தனபாலு: மாசமான சம்பளம், நாள்தோறும் கிம்பளம், சவுகரியத்துக்கு ஆபீஸ் வரும் வசதி, போரடிச்சா போராட்டம் பண்ற உரிமை எல்லாம் இருக்கற அரசு ஊழியர் பதவிக்காக காத்திருக்கிறது, உங்களுக்கு அவல நிலை போல தெரியுதா...?