Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் "பங்க்' ஊழியர்கள் நூதன மோசடி : வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் "பங்க்' ஊழியர்கள் நூதன மோசடி : வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் "பங்க்' ஊழியர்கள் நூதன மோசடி : வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் "பங்க்' ஊழியர்கள் நூதன மோசடி : வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 11, 2011 11:31 PM


Google News

மாமல்லபுரம் : மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக பெட்ரோல் 'பங்க்'கில், பெட்ரோல் நிரப்பும் ஊழியர்கள், நூதன மோசடி செய்வதாக, வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.

மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பெட்ரோல் 'பங்க்' இயங்கி வருகிறது. இங்கு, ஒரே ஒரு பெட்ரோல் 'பங்க்' மட்டுமே உள்ளதால், உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, சுற்றுலா வாகனம், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனம் என, நாள்தோறும் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர்.



கடந்த சில மாதங்களாக, 'பங்க்' ஊழியர்கள், எரிபொருள் நிரப்புவதில், நூதன மோசடி செய்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் நிற்கும் வாகனத்தில், குறிப்பிட்ட தொகைக்கு பெட்ரோல் நிரப்பியதும், அந்த இணைப்பை துண்டிக்காமல், அடுத்த வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதாக புகார் எழுந்துள்ளது. முதல் வாகனம் 200 ரூபாய்க்கும், அடுத்த வாகனம் 500 ரூபாய்க்கும் நிரப்புவதாக இருந்தால், முதல் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பின், இணைப்பை துண்டிக்காமல், அடுத்த வாகனத்திற்கு, நிரப்பும்போது முந்தைய வாகனம் நிரப்பிய 200 ரூபாய் கழித்து, மீதியுள்ள 300 ரூபாய்க்கு மட்டுமே நிரப்புவதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.



மோசடியை அறிந்துள்ள உள்ளூர் வாடிக்கையாளர்கள், எச்சரிக்கையுடன் கண்காணித்து நிரப்புகின்றனர். சிலர், குறிப்பிட்ட கொள்ளளவு கேன்களில் வாங்கிச்செல்கின்றனர். வெளியூர் நபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஏமாறுகின்றனர். மாமல்லபுர டிராவல்ஸ் வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, ''சென்னை சென்று திரும்புவதற்கேற்ப, இங்கு, போதுமான பெட்ரோல் நிரப்பினேன். சென்னையிலிருந்து திரும்பிய போது, வழியில் பெட்ரோல் தீர்ந்து கார் நின்றுவிட்டது. தேவைக்கேற்ப நிரப்பியிருந்தும் வழியில் தீர்ந்ததால், சந்தேகப்பட்டு விசாரித்த போது, ஊழியர்கள் மோசடி தெரிந்தது. ஊழியர்களிடம் கேட்டபோது, அடாவடியாக பேசுகின்றனர். அரசே நடத்தும் 'பங்க்'கில், மோசடி நடப்பது வேதனையாக உள்ளது'' என்றார். பெட்ரோல் 'பங்க்' மேலாளர் சொக்கலிங்கத்திடம் கேட்டபோது, ''வாடிக்கையாளர்களிடம் பூஜ்யத்தை காண்பித்து, பிறகு நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளேன். வாடிக்கையாளர்களும், நிரப்பும்போது கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us