ADDED : செப் 12, 2011 02:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத கார் மோதி ஏழு வயது பள்ளி சிறுவன் பலியானார்.
கிருஷ்ணகிரி அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி
சித்ரா. இவர்களது மகன் மதன்குமார் (7). பூசாரிப்பட்டியில் உள்ள அரசு
பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை
சித்ரா தனது மகன் மதன்குமாருடன் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக
கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் புதூர் ஏரிக்கரை அருகே தேசிய
நெடுஞ்சாலையை கடந்துள்ளார்.அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி
சென்ற அடையாளம் தெரியாத கார் சிறுவன் மதன்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல்
சென்றது. விபத்தில் பலத்தகாயம் அடைந்த மதன்குமார் கிருஷ்ணகிரி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக
இறந்தார்.