/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும்'"ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும்'
"ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும்'
"ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும்'
"ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும்'
ADDED : ஆக 20, 2011 11:27 PM
கோவை:''அடுத்த சில ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை, 2.70 லட்சமாக உயரும்
வாய்ப்புள்ளது,'' என, இந்திய பட்டயக் கணக்காளர் சங்க தலைவர் ராமசாமி
தெரிவித்தார்.இந்திய பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்கள்) சங்கத்தின் தென்
மண்டல மாநாடு, 'ஞான சங்கமம்' கோவையில் நேற்று துவங்கியது. இன்று நிறைவு
பெறுகிறது.இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் ராமசாமி
பேசியதாவது:சர்வதேச தரத்திலான தணிக்கை முறையைவிட, இந்திய தணிக்கை முறை
நன்றாகவுள்ளது. இந்திய பொருளாதார மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும்
ரிசர்வ் வங்கி, செபி, போன்ற அமைப்புகளுடன் அவ்வபோது இச்சங்கமும் பங்கேற்று,
மாறுதல்களை தெரிவித்து வருகின்றன. நிறுவனங்கள் தொடர்ந்து ஒரே ஆடிட்டரை
மட்டுமே, திரும்ப திரும்ப கணக்குத் தணிக்கைக்கு பயன்படுத்தக் கூடாது.
சுழற்சிமுறைக்கு மாற வேண்டும். சுழற்சி முறையில் தணிக்கை செய்யப்படும்
நிறுவனங்கள், முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இல்லை.தணிக்கை பணியில், தகவல்
தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது.
சர்வதேச அளவில், எந்த வங்கியிலும்
சோதனை செய்து கொள்ளவும் தகவல் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. பட்டயக்
கணக்காளர் சங்கத்துக்கு நாடு முழுவதும், 120 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன.
இந்த பரிசோதனைக் கூடங்களை. சி.ஏ., படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி
வருகின்றனர். இவற்றை உறுப்பினர்களும் பயன்படுத்த முன்வர வேண்டும்.இந்தியா
முழுவதுக்குமான, பொருட்கள் சேவை மீதான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அனைத்து
மாநிலங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வரியாக உள்ளது. அரசுக்கு அதிக
வருவாய் ஈட்டித் தரும் முறையாக, இது அமைய இருந்தாலும், தணிக்கைத் துறையை
பொருத்தவரை, இது கூடுதல் பணியாக அமையலாம்.இந்தியளவில், ஆடிட்டராக
விரும்புவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடுத்த சில
ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை, 2.70 லட்சமாக உயரும் வாய்ப்புள்ளது. ஆனால்,
தற்போதுள்ள ஆடிட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.ஆடிட்டர் பணிக்கு
படிப்பதை பலரும் தவிர்க்கக் காரணமாக, இதன் கடினமான கல்வி முறை
அமைந்துள்ளது. அதேசமயம், பட்டப்படிப்பு முடிப்போர் பலர் இதில் ஆர்வம்
காட்டுவதில்லை.
எளிதாக ஏதாவது ஒரு வேலை கிடைத்து விடுவதால், இப்படிப்புக்கான
முயிற்சியை பலரும் கைவிட்டு விடுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள, 75 ஆயிரம்
ஆடிட்டர்களின், 90 சதவீதம் பேர், நிறுவனங்களின் பணிக்கு செல்லவே
விரும்புகின்றனர். நிறுவனங்களில் இவர்ளுக்கு பல லட்ச ரூபாய் சம்பளமாக
வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு, 55 லட்ச ரூபாய் சம்பளம் பெறும்
ஆடிட்டர்களும் உள்ளனர். தொழிலாக இதை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து
வருகிறது.வெளிநாடுகளிலும் இந்திய ஆடிட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில், இந்திய தணிக்கை முறை இரண்டாவது மிகப் பெரிதாக வளர்ச்சி
பெற்றுள்ளது. விரைவில் இது முதலிடத்தை பெறவும், வாய்ப்பு உள்ளது.இவ்வாறு,
ராமசாமி பேசினார். தென் மண்டல சங்கத்தின் செயலர் முரளி நன்றி
கூறினார்.மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று, பல தொழில்நுட்பக் கட்டுரைகள்,
விவாதங்கள் இடம் பெறுகின்றன.


