Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வருவாய்த்துறை அமைச்சர் பேச்சு மழை நீரை சேமிக்க ஒருங்கிணைந்து பாடுபடணும்

வருவாய்த்துறை அமைச்சர் பேச்சு மழை நீரை சேமிக்க ஒருங்கிணைந்து பாடுபடணும்

வருவாய்த்துறை அமைச்சர் பேச்சு மழை நீரை சேமிக்க ஒருங்கிணைந்து பாடுபடணும்

வருவாய்த்துறை அமைச்சர் பேச்சு மழை நீரை சேமிக்க ஒருங்கிணைந்து பாடுபடணும்

ADDED : ஜூலை 24, 2011 01:02 AM


Google News

திருச்செங்கோடு: ''எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கல்வி நிறுவனங்கள், மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மழை நீரை சேமிக்க பாடுபட வேண்டும்,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி பேசினார். அவ்வை கல்வி நிலையம் நடுநிலைப்பள்ளி சார்பில், திருச்செங்கோடு யூனியன் பகுதியில் உள்ள, 26 கிராம பஞ்சாயத்துகளுக்கு விதை நடும் விழா, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார். எம்.எல்.ஏ., சம்பத்குமார், மாவட்ட வன அலுவலர் ஆஷீஸ்குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, 26 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு விதைகள் வழங்கி பேசியதாவது:



இவ்விழாவில், 26 பஞ்சாயத்து தலைவர்களுக்கு சூபாபுல் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூபாபுல் விதைகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் எந்த பகுதியிலும் வளரும் தன்மை உடையது. பஞ்சாயத்து தலைவர்கள், சூபாபுல்லை வளர்த்து புவி வெப்பமடைதலை தடுத்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 2001-2006ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் மழைநீர் சேகரிப்பு என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அதை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள், அத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். தற்போது, மழைநீர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கல்வி நிறுவனங்கள், மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மழை நீரை சேமிக்க பாடுபட வேண்டும்.



திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கிரிவலப்பாதை முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும். நமது மாவட்டத்தில், கொல்லிமலை, ராசிபுரம் பகுதிகளில் மட்டும் மரங்கள் நன்கு வளர்ந்து பசுமையாக இருக்கிறது. அதேபோல், மாவட்டம் முழுவதும் பசுமையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்கள் பங்குக்கு இரண்டு மரக்கன்றுகளை நடவேண்டும். அதை உறுதியோடும், ஆர்வத்தோடும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் முன்னிலை வகித்து பேசுகையில்,''நாமக்கல் மாவட்டத்தில், சராசரி மழையளவு, 76 செ.மீ., இம்மாவட்டம் மழை மறைவு மாவட்டமாக உள்ளது. தற்போது வழங்கப்படும் விதைகளை நட்டு, அதன் மூலம் வளரும் தாவரங்களை நன்றாக பராமரித்து பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் மழை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இயற்கை வளத்தை நாம் அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும்,'' என்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் மோகன், அரசு அதிகாரிகள், கல்வி நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us