விபத்து வழக்கில் அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் அரசு பஸ்கள் ஜப்தி
ADDED : ஜூலை 21, 2011 01:07 AM
கோபிசெட்டிபாளையம்: கோவை சமகுளம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் சத்யாதேவி (24).
மொசகவுண்டனூர் செட்டிபாளையத்தில் தபால்காரராக பணியாற்றுகிறார். 2007 நவம்பர் 15ம் தேதி கணேசபுரம் - செலுங்குபாளையம் சாலையில் மொபெட்டில் சென்றார். எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் காயம் அடைந்தார். அன்னூர் போலீஸார் விசாரித்தனர்.நஷ்டயீடு வழங்க கோரி கோபி முதல் கூடுதல் நீதிமன்றத்தில் சத்யாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 462 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் நஷ்டயீடு வழங்கவில்லை.சத்யாதேவி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வசந்தலீலா, பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று, கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல தயாராக இருந்த அரசு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.பவானி: பவானியை சேர்ந்தவர் மனோன்மணி (30). 2004 ஏப்ரல் 6ம் தேதி பவானியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்ஸில் சென்றார். அவினாசி அருகே பஸ் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் மனோன்மணி காயமடைந்தார்.நஷ்டயீடுகேட்டு பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2008ல், 5.06 லட்சம் ரூபாய் நஷ்டயீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் லாரி உரிமையாளர் தனது பங்கான 2.53 லட்சத்தை கொடுத்தார். மீதத் தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.பவானி விரைவு நீதிமன்றத்தில் மனோன்மணி மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். நீதிபதி ராஜசேகரன் விசாரித்து, அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று பவானி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்து அரசு பஸ்ஸை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு கொண்டுவந்தனர்.


