/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கீழ்பவானி தண்ணீரால் நெல் நடவுப்பணி தீவிரம்கீழ்பவானி தண்ணீரால் நெல் நடவுப்பணி தீவிரம்
கீழ்பவானி தண்ணீரால் நெல் நடவுப்பணி தீவிரம்
கீழ்பவானி தண்ணீரால் நெல் நடவுப்பணி தீவிரம்
கீழ்பவானி தண்ணீரால் நெல் நடவுப்பணி தீவிரம்
ADDED : அக் 03, 2011 03:16 AM
காங்கேயம்: காங்கேயம் அருகே நத்தகாடையூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து நெல் நடவுப்பணி தீவிரமடந்துள்ளது.
பவானி சாகர் அணையில் இருந்து ஆண்டு தோறும் கீழ் பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15ம் தேதி பசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
காங்கேயம் அருகே நத்தகாடையூர் சுற்றுப்பகுதி கிராமங்களில் கீழ் பவானி பாசன வாய்க்கால் மூலம் நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்கள் அதிகளவு சாகுபடியாகிறது.
வெள்ளியம்பாளையம், மருதுறை, குட்டப்பாளையம், நஞ்சப்பன் கவுண்டன்வலசு, குட்டறை, பாரதிபுரம், பழையகோட்டை, மேப்பாளையம், திட்டுப்பாறை மற்றும் சுற்றுப்பகுதியில் 3,000 ஏக்கர் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதியில் அதிகளவு ஐ.ஆர்.20 ரக நெல் சாகுபடியாகும். ஆகஸ்ட் 15ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விளை நிலங்களை சீரமைத்து, நாற்றாங்கால் அமைத்து, நடவுக்கு உழவு செய்து தயாரான நிலையில், சென்ற வாரம் முதல் இப்பகுதிகளில் நடவு பணி துவங்கியுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்கள் அதிகளவு பணிக்கு செல்வதால், நடவுக்கு ஆள் கிடைக்காமல், விவசாயிகள் தவிர்க்கின்றனர்.
தொழிலாளர்கள் தட்டுப்பாடால் கூலி கடுமையாக உயர்ந்து, நடவுப்பணி பாதிக்கிறது. கூலி உயர்ந்தாலும், வழியின்றி கூடுதல் கூலி கொடுத்து விவசாயத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.
வெள்ளியம்பாளையம் விவசாயி ஞானசம்பந்தன் கூறியதாவது: 4 ஏக்கரில் நெல் நடவு பணியை துவக்கியுள்ளேன். நடவுக்கு முன்பை விட செலவு அதிகரித்துள்ளது. நடவு உட்பட விவசாய பணிக்கு கூலியாட்கள் தேவையான நேரத்தில் கிடைப்பதில்லை. டிராக்டரில் உழவு ஓட்ட ஒரு நாளைக்கு 750 ரூபாய் கேட்கின்றனர். விதை நெல் ஒரு கிலோ 22.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய 13, 14 பேர் வரை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு நடவு செலவு 2,600 ரூபாய் செலவாகிறது. நடும்போது யூரியா உரம் ஏக்கருக்கு 2,500 ரூபாய் வீதம் பத்து ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தவிர நோய் தாக்கினால், பூச்சி மருந்து பராமரிப்பு என செலவு உயர்கிறது. போதிய பருவமழை பெய்தால், ஏக்கருக்கு 2.5 டன் வரை நெல் உற்பத்தியிருக்கும். நடவு செலவு அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு கிலோ நெல்லுக்கு கொள்முதல் விலை மோட்டா ரகத்துக்கு 10.50ம், சன்னரகத்துக்கு 11 ரூபாய் தான் வழங்குகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் நடவு செலவுக்கு கூட கட்டுபடியாகவில்லை. இதனால் நெல் சாகுபடி படிப்படியாக குறைகிறது. பெரும்பாலானோர் மஞ்சள், கரும்புக்கு மாறிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


