Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகராட்சி மண்டல ஆஃபீஸில் கறி விருந்து

சேலம் மாநகராட்சி மண்டல ஆஃபீஸில் கறி விருந்து

சேலம் மாநகராட்சி மண்டல ஆஃபீஸில் கறி விருந்து

சேலம் மாநகராட்சி மண்டல ஆஃபீஸில் கறி விருந்து

ADDED : செப் 15, 2011 02:24 AM


Google News
சேலம்: சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில், நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு, பிரியாணியுடன், கறி விருந்து பரிமாறப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணியை விட்டு, மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சியினருடன் கைகோர்த்து கறி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாநகராட்சியில், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்கள் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன், மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், தொடர்ந்து விபத்துக்களில் சிக்கி வந்தனர்.நள்ளிரவு 12 மணிக்கு, மாநகராட்சியின் மைய அலுவலகத்தில், 'கிடா' வெட்டி ரகசியமாக பூஜை போட்டனர். ஒருசில வாரத்தில், சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில், அரசு ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகை வசூல் செய்து, வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் கிடா வெட்டி, மண்டல அலுவலகத்திலேயே பிரியாணி செய்து, ஊழியர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில், நேற்று அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் கைகோர்த்து, 'கிடா' விருந்து நடத்தியது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், சேலம் மாநகராட்சியில் கடைசி மாமன்ற கூட்டம் நடந்தது. கவுன்சிலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது.நேற்று, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில், தி.மு.க., வை சேர்ந்த மண்டல குழு தலைவர் அசோகன் தலைமையில், கடைசி மண்டல கூட்டம் நடத்த முடிவு நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடைசி மண்டல கூட்டம் என்பதால், அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு, 'கிடா' விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு, மண்டல அலுவலகத்துக்கு உள்ளேயே மட்டன் பிரியாணி, வருவல் உள்ளிட்ட அசைவ வகைகள் தயார் செய்யப்பட்டது.மதியம் 1 மணிக்கு விருந்து நிகழ்ச்சி நடந்தது. அம்மாப்பேட்டை மண்டல குழு தலைவர் அசோகன், மாநகராட்சி உதவி கமிஷனர் மோகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், கவுன்சிலர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு பிரியாணியுடன் கறி விருந்து பரிமாறப்பட்டது.மாநகராட்சியின் மைய அலுவலகம் மற்றும் பிற மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு சிலர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில், அதிகாரிகள் உள்ளாட்சி தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். வரி வசூல் உள்ளிட்ட மாநகராட்சி பணிகள் கூட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, மண்டல அலுவலகத்துக்கு உள்ளேயே பிரியாணி செய்து, கறி விருந்து நடத்தும் நிகழ்ச்சிக்கு துணைபோனது, பல்வேறு தரப்பினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us