Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உடைந்து போன ஆவின் பால் பாக்கெட்கள் :எஸ்.பி., அலுவலகத்தில் முகவர்கள் முற்றுகை

உடைந்து போன ஆவின் பால் பாக்கெட்கள் :எஸ்.பி., அலுவலகத்தில் முகவர்கள் முற்றுகை

உடைந்து போன ஆவின் பால் பாக்கெட்கள் :எஸ்.பி., அலுவலகத்தில் முகவர்கள் முற்றுகை

உடைந்து போன ஆவின் பால் பாக்கெட்கள் :எஸ்.பி., அலுவலகத்தில் முகவர்கள் முற்றுகை

ADDED : ஜூலை 29, 2011 12:44 AM


Google News
ஈரோடு: ஆவின் பால் பாக்கெட்கள் உடைந்து வருவதால், நஷ்டம் ஏற்படுவதாக கூறி, ஈரோடு எஸ்.பி., அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ஈரோடு மாவட்டம் சித்தோடில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு, தினமும் 2.5 லட்சம் லிட்டர் பால், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்கிறது.

இம்மாவட்ட மக்கள் பயன்பாட்டுக்கு 45 ஆயிரம் லிட்டர் பால், பாக்கெட்டாக மாற்றி, தினமும் காலை, மாலையில் விநியோகிக்கின்றனர். சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மீதமுள்ள பால் அனுப்பப்படுகிறது. இம்மாவட்டத்தில் மக்களுக்கு ஆவின் பால் விநியோகிக்க 300 முகவர்களை, ஆவின் நிர்வாகம் நியமித்துள்ளது. தினமும் 7 லாரிகளில், லாரி ஒன்றில் காலையில் 500 டப்கள், மாலையில் 250 முதல் 300 டப்கள், பால் பாக்கெட்கள் முகவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. டப் ஒன்றில் 12 லிட்டர் அளவுக்கு பால் பாக்கெட் எடுத்து வரப்படுகிறது. 10 லிட்டர் பால் பாக்கெட்கள் வைக்க இந்த டப்கள் வடிவமைக்கப்பட்டவை. பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளதால், டப்களில் கூடுதல் பாக்கெட் வைப்பதால், அழுத்தம் ஏற்பட்டு, அதிகப்படியான பால் பாக்கெட்கள் உடைகிறது. 100 பாக்கெட்டில் 10 பாக்கெட் வரை உடைகிறது. உடைந்த பாக்கொட்களுக்கும் பணம் செலுத்துவதால் நஷ்டம் ஏற்படுகிறது. ஆவின் நிர்வாகம், கலெக்டர் என பலரிடம், புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பால் முகவர்கள் நேற்று காலையில், ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்துக்கு உடைந்த பால் பாக்கெட்களை டப்பில் எடுத்து வந்து முற்றுகையிட்டனர். போலீஸார் சமாதானம் செய்தனர். ஆவின் பால் முகவர் ராஜா கூறியதாவது: பால் கொள்முதல் விலை உயர்த்தக்கோரி, போராடியபோது, இம்மாவட்டத்தில் 55 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட் விநியோகிக்கப்பட்டது. டப்களில் உடையும் பாக்கெட்களுக்கு மாற்றாக பால் பாக்கெட் வழங்கினர். பால் விநியோக அளவை, 45 ஆயிரமாக குறைத்ததுடன், டேமேஜ் பாக்கெட்களுக்கு பாதி விலை மட்டுமே கொடுக்கப்படும் என்றனர். உடைந்த பாக்கெட்டால் தினமும் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டயீடு வழங்குவதில்லை. சித்தோடு ஆவினில், 30 ஆண்டுகளுக்கு முன், பாக்கெட் சாராயம், பாக்கெட் செய்ய பயன்படுத்திய மிஷினால், இன்று வரையில் பாலை பாக்கெட் செய்கின்றனர். பழைய மிஷின் என்பதால், பால் பாக்கெட்கள் சரியாக ஒட்டாமல், டப்களில் உடைகிறது. விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் பால் வழங்க மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us