ADDED : ஏப் 24, 2026 04:06 AM

துமகூரு: துமகூரில், 'தேசிய ஜூனியர் அதலெடிக் விளையாட்டு போட்டிகள்' இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளன.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
துமகூரு நகரில் இன்று முதல் மூன்று நாட்கள், தேசிய ஜூனியர் அத்லெடிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இது, 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளாகும். துமகூரில் முதன்முறையாக, விளையாட்டு போட்டிகள் நடப்பது பெருமையான விஷயமாகும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில், உலகத்தரம் வாய்ந்த சிந்தடிக் டிராக் உட்பட, அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. துமகூரு உலகின் கவனத்தை ஈர்க்கிறது.
துமகூரில் மூன்று நாட்கள் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, 28 மாநிலங்களில் இருந்தும், சிறுவர், சிறுமியர் பங்கேற்று, அவரவர் மாநிலத்தின் பிரதிநிதியாக, 40 விதமான விளையாட்டுகளில் பங்கேற்பர். ஆகஸ்ட், 5 முதல், 9 வரை அமெரிக்காவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் அத்லெடிக் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், துமகூரில் நடக்கும் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவர்.
துமகூரில், 24வது தேசிய ஜூனியர் அத்லெடிக் விளையாட்டு போட்டிகள் நடத்த வாய்ப்பளித்த, அத்லெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா முக்கியஸ்தருக்கு, எங்களின் நன்றி. மாவட்டத்தின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.





