கதைச் சுருக்கம்
கவுதம் வாசுதேவ் மேனனிடம் இருந்து யாரும் இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்... அப்படி ஒரு அலற வைக்கும் படம்தான் நடுநிசி நாய்கள். பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன் மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுவதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் மொத்த கதையும்!
பெற்ற அப்பா மற்றும் அவரது நண்பர்களின் குரூப் செக்ஸ் ஷோக்களால் மனதளவில் எட்டு வயதிலேயே கெட்டுப் போகும் ஹீரோ வீரா அதனால் அனாதையும் ஆகிறான். தன்னை எடுத்து வளர்க்கும் பக்கத்து வீட்டு பெண்மணியை பலாத்காரமும் செய்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காகவும், அந்த தவறான உறவில் இருந்து விடுபடுவதற்காகவும், அதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த அம்மணி, தன் நீண்ட நாள் நண்பரை வீராவின் சாட்சி கையெழுத்துடன் (?) பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவிலேயே வளர்ப்பு தாயின் காதல் கணவரை தீர்த்துக் கட்டும் வீரா, அதனால் ஏற்படும் தீ விபத்தால் வளர்ப்பு தாய் கம் தான் தாலி கட்டாத தாரத்தையும் இழக்க வேண்டிய சூழல். வளர்ப்பு தாய் இறந்தாரா? இருந்தாரா? வீரா என்ன ஆனார்? எப்படி வாழ்ந்தார்? அவரால் எத்தனை பெண்கள் வீழ்ந்தனர்? என்பதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் திகிலும் பிகிலுமான மீதிக் கதை!
சைக்கோ நாயகன் வீராவாக புதுமுகம் வீராவே நடித்திருக்கிறார். இவர் ஜோராய் நடித்திருப்பதாய் சொல்ல முடியாவிட்டாலும் படம் பார்ப்பவர்களை பேஜாராய் பயமுறுத்தி இருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். வீராவின் எண்ணங்களில் அவ்வப்போது சின்ன வயது சமர் புகுந்து கொள்வதும், இல்லாத மீனாட்சி அம்மாளை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பண்ணு இவர் பண்ணும் சேட்டைகளும், கொலைகளும் படம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்பும் பயமுறுத்தும் ரகம்.
ஹீரோ வீராவின் வளர்ப்பு தாய் கம் தாரம் (படிக்கவே அருவறுப்பாய் இருக்கிறதல்லவா?!) மீனாட்சி அம்மாவாக ஸ்வப்ண ஆப்ரஹாம், ஆரம்ப காட்சிகளில் இளைஞர்களில் இளைஞர்களின் சொப்பனத்தை ஆக்ரமிக்கும் அளவிற்கும் அதன் பின் அதே சொப்பனத்தில் வந்து பயமுறுத்தும்படியாகவும் நடித்து பீதியை கிளப்பி இருக்கிறார்.
ஹீரோ வீராவின் பள்ளித் தோழியாக வந்து பள்ளி அறைத்தோழி ஆகாமலே தப்பிக்கும் சுகன்யாவாக வரும் சமீரா ரெட்டி, தன் காதலன் அர்ஜூனுடன் சேர்ந்து பண்ணும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே நச். மற்றபடி ப்ச்! சமீராவின் காதலர் அர்ஜூனாக வரும் அஸ்வின், போலீஸ் ஏ.சி.பி. விஜய்யாக வரும் தேவா, 8 வயது சமராகவும் , 13 வயது வீராவாகவும் வரும் மாஸ்டர் நடிகர்கள் என எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். வீராவின் சென்னை பங்களாவில் குறைக்கும் - கடிக்கும் டைசன் உள்ளிட்ட நாய்கள் கூட நடுநிசி நாய்கள் படத்தில் நன்றாகவே நடித்திருக்கின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவ்வின் கலை, சிவகுமார் அண்ட் ரங்கநாத் ரவியின் பின்னணி இசை உள்ளிட்ட எல்லாமும் நடுநிசி நாய்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன! ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் எழுத்தும், இயக்கமும்தான் பலவீனம்! ஒருவேளை மனநல நோயாளிகளை அடிக்கடி சந்திக்கும் மனநல மருத்துவர்களும் ஒரு மாதிரிதான் என்பார்கள்....! அது மாதிரி மனநல நோயாளி பற்றி படம் எடுத்த இப்பட இயக்குனருக்கும் ஏதாவது பிரச்சனையோ? தெரியவில்லை!
நடுநிசி நாய்கள் : குறைக்கவில்லை ; கடித்திருக்கிறது!!
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.