கதைச் சுருக்கம்
கடம்பனாக ஆர்யா, வீரமும் தீரமும் நிரம்பிய ஆஜானுபாகுவான முறுக்கேறிய உடம்பும், உரம் பாய்ந்த நெஞ்சுமாக நெடுக வளர்ந்த மரம் ஏறுகிறார், வானுயர்ந்த செங்குத்து மலையில் இருந்து, இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு குதித்து தொங்குப் பாறையில் மலைத்தேன் எடுக்கிறார். கயவர்களால் தோலுரிக்கப்பட்ட புலியைப் பார்த்து, பொங்குகிறார். கேத்தரின் தெரசாவுடன் ஒரு தினுசாய் ஆடிப்பாடி அசத்துகிறார். இதையெல்லாம் அட நம்ம ஆர்யாவா? இது..? என ரசிகன் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் சிறப்பாக செய்திருப்பது பாராட்டிற்குரியது.
ரதியாக கேத்தரின் தெரசா முழுக்க போர்த்திய காட்டன் புடவையும், ஆளை மயக்கும் நடையுமாக ஆர்யாவை கருவண்டு என்றும் தன்னை பொன்வண்டு என்றும் பாவித்தப்படி, அவரை சுற்றி சுற்றி வருவது மட்டுமின்றி, முதலில் காதலிக்க மறுத்து சாக சொல்லும், ஆர்யாவை கட்டிக் கொண்டு நீர்வீழ்ச்சி மேலிருந்து கீழே குதிப்பது வரை சுத்த சைவமாக இருப்பது, ஆர்யாவுக்கு அவர் மீது ஆசையை வரவழைத்தாலும், ரசிகனுக்கு அவ்வளவாக ஆசை வராது பார்த்துக் கொள்வது படத்திற்கு கொஞ்சம் பலவீனம்.
மற்றபடி, புள்ளக் குட்டி மாரியப்பனாக வரும் முருகதாஸ், தலைவர் மூப்பனாக வரும் சூப்பர் சுப்பராயன், வில்லன் தீப்ராஜ் ரணா, கேத்தரினின் அண்ணன் ராஜசிம்மன், நயவஞ்சக நல் அதிகாரியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி, எத்திராஜ் ஆகியோர் தங்களுக்கு தரப்பட்ட வேலையை வெகு சிறப்பாக செய்திருக்கின்றனர்.
தேவ்வின் படத்தொகுப்பு படாதொகுப்பு இல்லை... என்றாலும் பாடாவதி தொகுப்பும் அல்ல என்பது ஆறுதல். ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கத்தில் நடு காட்டு குடிசை பகுதி செட் சிறப்பு. எஸ்.ஆர் சதீஷ்கு மாரின் ஒளிப்பதிவில் பச்சை பசேல் காடும் மலையும் கோடை வெயிலுக்கு இதமான, பதமான கண்களுக்கு குளிர்ச்சி, மகிழ்ச்சி.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உச்சி மலை அழகு.... , ஒத்த பார்வையிலே..., சாமக்கோடங்கி.., இளரத்தம் சூடேறுதே... உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அவை சுபராகம் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.
ராகவாவின் எழுத்து, இயக்கத்தில், காட்டை அழிக்க நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய் என்றால், காட்டைக் காப்பாத்த நாங்களும் என்ன வேணா பண்ணுவோம் டா..., காட்டைக் காக்குற நாங்கள்ளாம் காட்டுமிராண்டி பயன்னா.... நாங்க அப்படியே இருந்துட்டு போறோம்... எங்க சந்ததியை சேர்ந்த கடைசி ஒருத்தன் இருக்கிற வரைக்கும் உங்களால காட்டுலருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துப் போக முடியாதுடா... என்பது உள்ளிட்ட பன்ச்கள், திருவோட்டுக் காய் வீர் விளையாட்டு, செந்தட்டி அரிப்பு, பாட்டில் குத்தியதால் செப்டிக் ஆன யானை காலுக்கு மருந்து போடும் தத்ரூபக்காட்சி... உள்ளிட்ட சீன்கள் சிறப்பு. அதே நேரம், ஒரு சில அரசு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு தெரியாமல், பல மைல்கள் பரந்து விரிந்த ஒட்டு மொத்தக் காட்டையும் ஒற்றை ஆளால் தன் படை, பரிவாரங்களைக் கொண்டு சூறையாட முடியுமா? என எழும் வினாவிற்கு மட்டும் கடம்பன் இன்னும் அழுத்தம் திருத்தமாக சற்றே வித்தியாசமாக விடை சொல்லியிருக்குமேயானால், கடம்பன் மேலும் சிறப்பாக காட்சியளித்திருக்கும். ஆனாலும், அந்த யானைகளுடன் கூடிய க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பிரமாண்டம், பிரமாதம்!
மொத்தத்தில், தமிழ் சினிமாவுக்கு சற்றே புதிய களமென்பதால், நிச்சயம் கடம்பன் - கரை சேருவான்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.