கதைச் சுருக்கம்
இந்தக் கருவையும், கதையையும் இந்திய ஏர்போர்ஸ் பின்னணியில் எத்தனை பிரமாண்டமாகவும், எத்தனைக்கு எத்தனை பிரமாதமாகவும் தரமுடியுமோ?, அத்தனைக்கு அத்தனை மிரட்டலாகவும் அழகாகவும் தந்திருக்கிறது மணிரத்னம் தலைமையிலான காற்று வெளியிடை படக்குழு. அதற்காக முதலில் அவருக்கும், அவரது டீமுக்கும் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!
ஏர்போர்ஸ் ஆபிஸர் வி.சி எனும் பைட்டர்பிளைட் பைலட்டாக வருண் சக்ரபாணியாக கார்த்தி, செமயாய் தன் பாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். மிலிட்டரி ஆபிஸராக மிடுக்கு காட்டுவதிலாகட்டும், அருகில் இளம் பெண் யாராவது இருந்து விட்டால் பைட்டர் விமானம் மாதிரி ஓட்டுவதிலாகட்டும், ஹீரோயின் அதிதி ராவ்வுடனான காதல் காட்சிகளில் நெருக்கம் கிறக்கம் காட்டி நடித்திருப்பதிலாகட்டும் சகலத்திலும் அசத்தியிருக்கிறார் மனிதர்.
நண்பர்கள் முன்னிலையில் காதலி அதிதி ராவ்விடம் அடிக்கடி அதீத கோபம் காட்டி விட்டு, பிறகு சாரி, சாரி... ஐ லவ் யூ, ஐ லவ் யூ என கெஞ்சுவது, கொஞ்சுவதில் தொடங்கி, உன் குரல் கேட்க ஆரம்பிச்சுடுச்சு..., உன் வாசம் வர ஆரம்பிச்சுடுச்சு... உன் சிரிப்பு, உன் சந்தோஷம்... என பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பித்து ஆப்கான் பார்டரை நெருங்கும் கார்த்தி, நம்பிக்கையுடன் காதலியை நினைத்து புலம்பும் ஏரியாக்கள் வரை கார்த்தி காதல் ரசம் சொட்ட சொட்ட பக்காவாக நடித்திருக்கிறார். அதே மாதிரி எதிரி நாட்டிடம் சிக்கிய ஏர் போர்ஸ் ஆபிஸராக அவர் படும் பாடும் அங்கிருத்து அவர் தப்பித்து, க்ளைமாக்ஸில் பார்டரில் ஒரு சரக்கு லாரியில் பாக் மிலிட்டரி வண்டிகளை துவம்சம் செய்து விட்டு பார்டரில் நுழைந்து தப்பும் இடங்களிலும் சரி மிடுக்கான மிலிட்டரி வீரராக செமயாய் மிரட்டி இருக்கிறார் கார்த்தி. வாவ்!
அதே மாதிரி, க்ளைமாக்ஸில் நாயகியையும், தன் குழந்தையையும் ஒரு வழியாக தேடிக் கண்டுபிடிக்கும் கார்த்தியைப் பார்த்து, உன்னை, எங்கேயோ பார்த்திருக்கேன்... எனும் குழந்தையிடம் உங்களை கிட்டத்தட்ட ஏழு மலை ஏழு கடல் தாண்டி மூன்று ஆண்டு கழித்து... வந்திருக்கேன் என அழுதபடி கூறும் இடத்தில் ரசிகனும் அழுவது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது!
கதாநாயகியாக கார்த்திக்கு சிகிச்சை தரும் டாக்டர் லீலா ஆபிரகாமாகவும், மறைந்த கார்த்தியின் பேட்ச்மேட் ரவி ஆபிரகாமின் சகோதரியாகவும் கார்த்தியை சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரை காதலிக்கும் காதலியாக அதீதி ராவ், அசத்தியிருக்கிறார்.
தன்னை திருமணம் செய்வதாக ரிஜிஸ்தர் ஆபிஸ் வரச் சொல்லிவிட்டு கடமையே கண்ணாக இருந்ததால் அதை மறந்தே போன கார்த்தியிடம் அம்மணி கோபிக்கும் இடங்களில் தொடங்கி, கார்த்தியின் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றோர் பக்கமும் நிற்க முடியாது, கார்த்தியின் கோபத்தையும் சமாளிக்க முடியாது அதிதி படும் பாட்டில் அம்மணி செமயாய் நடிப்பு காட்டியிருகிறார். அதே மாதிரி, நீ என்னை கொத்தடிமை மாதிரி செல்ல நாய்க்குட்டி மாதிரி நினைக்கிற... எனக்கு ஈக்குவல் ரிலேஷன்ஷிப் வேணும்..... என முரட்டுத்தன கார்த்தியிடம் அழும் இடங்களிலும், உன் மீது ஒரே ஆஸ்பத்திரி வாசனை... என மிலிட்டரி தாத்தா டெல்லி கணேஷ் சொல்ல, இது, நீங்க நேற்று சாப்பிட்டு இப்பவும் உங்க மேல அடிக்கும் ரம் வாசனையை விட மேல்.... என சிரித்தபடி செல்லும் இடங்களிலும் அசத்தியிருக்கிறார் அம்மணி. வாவ்!
டாக்டர்.நிதியாக, நாயகியின் தோழியாக வரும் ருக்மணி விஜயக்குமார், அந்த ஆபிஸர் அசோக் இருக்கான்ல அவன் என்னை சுத்தி சுத்தி வாரான்.. எனக்கு உங்க மேல ஒரு இது உங்களுக்கு லீலாவை பிடிக்கும்... லீலாவுக்கு வி.சியைத் தான் பிடிக்கும் வி.சிக்கு வி.சி மட்டும் தான் பிடிக்கும்... என பாலாஜியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் லாவகம் அவரையும் பாராட்ட வைக்கிறது.
இவர்களை மாதிரியே நாயகியை ஒன் சைடாக லவ்வும் மிலிட்டரி டாக்டர் இலியாஸ் ஹூசைனாக, காமெடி பாலாஜி நர்ஸ் அச்சம்மாவாக லலிதா கே பி.ஏ.சி, நாயகியின் தாத்தாவாக ரிட்டயர்டு கர்னல் மித்ரனாக டெல்லி கணேஷ் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றன்.
ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் காதல் காட்சிகளில் ஒரு சில இடங்களில் இருக்கும் இழுவை தன்மை மட்டும் சற்றே நெருடல். மற்றபடி படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு.
எஸ்.ரவிவர்மனின் ஒளிப்பதிவில், இந்தியா, எல்லைப் பகுதிகளின் பனிப்படர்ந்த இயற்கை அழகும், பைட்டர் விமானங்கள் சர், சர்... என்று பறந்து செய்யும் சாகச அழகும் படத்திற்கு பெரும் பலம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் நல்லாய் அல்லாய்..., அழகியே அழகியே..., வான் வருவான்.... , சாரட்டுவண்டியிலே ...., ஜூகினி ... , தங்க கிளவோ... ஆகிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ஒய்யார ராகம். அதே மாதிரி, மிரட்டலாகவும், மெலோடியாகவும் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கா பலம்.
மணிரத்னத்தின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில., நீள, நீள, காதல் காட்சிகள், சின்னதாய் சில லாஜிக் குறைகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நம் இந்திய எல்லையோர விமானபடை தளங்களையும், போர் விமானங்கள் காது கிழிய உயர, உயர பறக்கும் விதத்தையும், இமாச்சல பனிப் பிரதேசங்களையும் மிக அழகாகவும், தத்ரூபமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திற்காகவும், க்ளைமாக்ஸில் பாக் - ஆப்கான் பார்டர் மிலிட்டரி செக்போஸ்ட்டில் பறக்கும் பாகிஸ்தான் கொடியை சாமர்த்தியமாக கார்த்தி தப்பித்து வரும் லாரியை விட்டு ஏற்றி வீழ்த்தும் நட்டுப்பற்று காட்சிக்காகவும் காற்று வெளியிடை படத்தை இடைவேளை இல்லாமல் இரண்டு, மூன்று முறை கண்டு கொண்டே இருக்கலாம்! காதல் தொற்றையும்(?), தேசப்பற்றையும்... மிகவும் பொயட்டிக்காகவும், அழகாகவும் கூற, மணிரத்னத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
மொத்தத்தில், காற்று வெளியிடை - நாயகியின் மீது, நாயகருக்கு மட்டுமல்ல, நாட்டின் மீது நமக்கும், கூட்டிடும் காதல் எடை!

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!