கதைச் சுருக்கம்
விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் விற்பனை மையங்களை துவக்க இடம் தேர்வு செய்யவும், அதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்யவும் கீதன் வந்திருப்பது மாதிரியே, கிராம மருத்துவ முகாமுக்கு வந்திருக்கிறார் டாக்டர் சந்தியா எனும் ஹரிதா. இருவருக்குள்ளும் இருவரது நற்பண்புகளையும் பார்த்து, பார்த்து காதல் பிறக்கிறது. முதல் காதலில் தோல்வியுள்ள கீதன், இரண்டாவது காதலில் வெற்றி பெற்றாரா.?, தன் லட்சியமான விவசாயி - விலைபொருள் - விலை நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இலக்கை அடைந்தாரா.? இல்லையா..? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‛‛குறையொன்றுமில்லை!
கிருஷ்ணாவாக வரும் அறிமுக நாயகர் கீதன், யதார்த்தமான நடிப்பில் வசீகரிக்கிறார். தன் லட்சியத்திற்காகவும், காதலுக்காகவும் போராடும் அவரது நடிப்பு, துடிப்பு எல்லாம் நம்பிக்கையை தருகிறது.
சந்தியாவாக டாக்டர் ஹீரோயினாக வரும் ஹரிதா, இளம் பெண் மருத்துவர்களுக்கே உரிய மிடுக்கும், துடுக்குமாக மிரட்டியிருக்கிறார். ஏக்கம், ஏமாற்றம், காதல், களிப்பு... எல்லாவற்றிலும் கைதேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் அம்மணி.
கீதன், ஹரிதா மாதிரியே நண்பராக வரும் ஹிட்லர், அம்ருதா, உள்ளிட்டோரும் அருமையான நிடிப்பை வாரி வழங்கியிருக்கின்றனர்.
அசோக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு, ராமணுவின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் அழுத்தமான கதையை இன்னும் விறுவிறுப்பாக இயக்குநர் கார்த்திக் ரவி படமாக்கியிருந்தார் என்றால், ‛‛குறையொன்றுமில்லை இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்!
மொத்தத்தில், ‛‛குறையொன்றுமில்லை - படத்தில் பெரிதாய் ‛‛தவறொன்றுமில்லை!













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!