ஈரோடு:இரு மாதங்களாக 40 ரூபாய் வரை உச்ச விலையில் இருந்த தக்காளி, இரு வாரங்களாக எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, உருளைக்கிழங்கு கிலோ பத்து ரூபாய், முள்ளங்கி 8, பீன்ஸ் 15, பழைய இஞ்சி 40, புதிய இஞ்சி 22, முட்டை கோஸ் 10, நூல்கோல் 20, பீட்ரூட் 12, கத்தரிக்காய் 10, புடலை 10, சுரைக்காய் நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 10, கேரட் 15, சிறிய வெங்காயம் 12, பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேதாஜி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:இரு மாதங்களுக்கு முன், காய்கறி விலை ஏற்றம் விற்பனையை கடுமையாக பாதித்தது. தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தற்போது, தாராபுரம், தாளவாடி, ஆந்திரா ஆகிய இடங்களில் தக்காளி விளைச்சல் அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக, தாராபுரத்திலிருந்து கொண்டு வரப்படும் தக்காளி மார்க்கெட்டில் குவிகிறது. இதனால், விலை குறைந்து எட்டு ரூபாய்க்கு சரிந்துள்ளது. இன்னும் மூன்று மாதத்துக்கு சீஸணுன் இருப்பதால், மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


