மேட்டூர்: ஆடிபெருக்கை முன்னிட்டு நேற்று லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் மேட்டூர் காவிரியில் நீராடினர்.
நேற்று ஆடிபெருக்கு பண்டிகையை முன்னிட்டு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கரையோர மாவட்டத்தை சேர்ந்த மக்கள் காவிரி ஓடும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்பட 12 மாவட்டங்களிலும் ஆடிபெருக்கு விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று காவிரியில் புனித நீராட மேட்டூரில் குவிந்தனர். அனைவரும் மேட்டூர் முனியப்பன் கோயில், காவிரிபாலம், எம்.ஜி.ஆர்., பாலம் பகுதியில் காவிரியில் நீராடினார். பின்னர் அணை முனியப்பனை வணங்கி விட்டு, பூங்காவை சுற்றி பார்த்து ஊர் திரும்பினர்.கரையோர கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் காவல் தெய்வங்களின் ஈட்டி, சூலாயுதம் போன்ற ஆயுதங்களை மேட்டூர் காவிரியில் சுத்தம் செய்து, நீராடி, புனித நீரை கிராம கோவில்களுக்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர்.ஆடிபெருக்கை முன்னிட்டு சேலம், தர்மபுரி, ஈரோடு, தாரமங்கலம், ஜலகண்டபுரம் பகுதியில் இருந்து மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சேலம் எஸ்.பி., ஜான் நிக்கல்சன் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தீயணைப்பு, மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


