/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது ஆழியாறு அணை

சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது ஆழியாறு அணை

ADDED : ஆக 04, 2010 03:20 AM


Google News

பொள்ளாச்சி : ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி ஆழியாறு அணைப்பகுதி, மங்கி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதனால், சுற்றுலா பகுதிகளில் பண்டிகை களைகட்டியது.ஆழியாறுஅணை, ஆழியாறு ஆறு, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் மக்கள் குடும்பம் சகிதமாக வந்திருந்து, ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், பெய்த மழையினால் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதை கண்டுகளிக்க வெளிமாநில சுற்றுலா பயணிகளும் ஆழியாறு பகுதிகளுக்கு படையெடுத்தனர்.பயணிகள் வருகை அதிகரித்திருந்ததால், கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டது.



அணைக்கு வந்த பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். வழக்கத்தைவிட ஆழியாறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.ஆழியாறு ஆறு, அணைப்பகுதிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆழியாறு பகுதிக்கு நேற்று மதியம் வரை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.அதேபோல், மங்கி பால்சில் நீர் கொட்டுவதால் பயணிகள் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர். மங்கி பால்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக, வனத்துறையினர் சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆழியாறுக்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அணைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பஸ், வேன்களில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் வண்ணமீன் காட்சியகம், பூங்கா, அணைப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்