வியட்நாம் அரச சிம்மாசனத்தை உடைத்தவர் கைது!
வியட்நாம் அரச சிம்மாசனத்தை உடைத்தவர் கைது!
வியட்நாம் அரச சிம்மாசனத்தை உடைத்தவர் கைது!
ADDED : மே 26, 2025 04:33 PM

ஹனோய்: வியட்நாம் நாட்டில் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பழமைவாய்ந்த சிம்மாசனத்தின் ஒரு பகுதியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
வியட்நாம் நாட்டில் கடைசி அரச வம்சம் 1800ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. இந்த மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், பயன்படுத்திய சிம்மாசனங்கள், தொடர்புடைய நினைவுச் சின்னங்கள் ஆகியவை யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வியட்நாம் அரசும் அவற்றை பொக்கிஷமாக கருதி பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் ஒன்று, தாய் ஹோ அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு நேற்று மதியம் புகுந்த ஒரு நபர், சிம்மாசனத்தின் ஒரு பகுதியான கை வைக்கும் இடத்தை உடைத்து விட்டார். அப்போது அவர் போதையில் இருந்து உள்ளார்.
அவரால் உடைக்கப்பட்ட டிராகன் உருவம் கொண்ட சிம்மாசனக் கைப்பிடி கீழே கிடக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆனது. மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், சிம்மாசனத்தின் கைப்பிடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சரித்திர, புராதன முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் உள்ள இடங்கள் அனைத்துக்கும் பாதுகாப்பை வியட்நாம் அரசு அதிகரித்துள்ளது.