சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படையுங்க; பிரான்ஸ் பார்லியில் எழுந்தது கோரிக்கை
சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படையுங்க; பிரான்ஸ் பார்லியில் எழுந்தது கோரிக்கை
சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படையுங்க; பிரான்ஸ் பார்லியில் எழுந்தது கோரிக்கை
ADDED : மார் 20, 2025 10:39 AM

பாரிஸ்: இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளமாக பிரான்ஸ் வழங்கிய சுதந்திர தேவி சிலையை, அமெரிக்கா திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் நாட்டு பார்லிமென்டில் எம்.பி., ரபேல் குளக்ஸ்மேன் வலியுறுத்தினார்.
நியூயார்க்கில் அமைந்துள்ள, 126 ஆண்டு கால பழமைவாய்ந்த சுதந்திர தேவி சிலை உலகப் புகழ் பெற்றதாகும். பிரான்ஸ் நாட்டின் சார்பில் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட இந்த சிலைக்குள், 354 படிக்கட்டுகள் இருந்தன. சமீபத்தில் சீரமைப்பு பணி நடந்தது. இவை, 393 படிக்கட்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. எல்லா பிரச்னைகளிலும் அதிபர் டிரம்ப் ஐரோப்பிய நாடுகளை குறை கூறுகிறார். இது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் பார்லிமென்டில் எம்.பி., ரபேல் குளக்ஸ்மேன் கூறியதாவது: அமெரிக்காவின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் நடவடிக்கை ஜனநாயகம், சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கிறது.
அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறார்கள். இதனால் பிரான்ஸ் பரிசாக கொடுத்த சுதந்திர தேவி சிலையை அவர்கள் வைத்திருக்க தகுதியில்லை. இதனால் நட்பின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவி சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா பதில்
இதற்கு, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் ஒப்படைப்பதாக இல்லை. 2ம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்ஸ், அமெரிக்க படையினரின் முயற்சியால் தான் விடுவிக்கப்பட்டது.
அன்று அமெரிக்காவின் உதவி இல்லையெனில் பிரான்சில் இப்போது ஜெர்மனி மொழிதான் பேசி கொண்டிருப்பார்கள். எனவே அமெரிக்காவுக்கு பிரான்ஸ் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரின் பதில், பிரான்ஸ் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.