Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/'புடின் முழு பைத்தியமாகி விட்டார்': அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

'புடின் முழு பைத்தியமாகி விட்டார்': அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

'புடின் முழு பைத்தியமாகி விட்டார்': அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

'புடின் முழு பைத்தியமாகி விட்டார்': அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம்

UPDATED : மே 27, 2025 10:14 AMADDED : மே 27, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின், முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார்.

ஐரோப்பிய நாடான உக்ரைன் - -ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப்பதவியேற்றதும் போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தற்காலிக போர் நிறுத்தம், பிடிபட்ட கைதிகளை விடுவிப்பது என சமரசம் ஏற்பட்டாலும் நிரந்தர போர் நிறுத்தத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் மீது, 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியது. இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நேற்று நியூஜெர்ஸியில் பேட்டியளித்த அவர், “நிறைய பேரை புடின் கொல்கிறார். அவருக்கு என்னவாயிற்று என தெரியவில்லை,” என்றார்.

இந்நிலையில், நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், 'புடினுக்கு முற்றிலுமாக பைத்தியம் பிடித்துவிட்டது' என ஆவேசமடைந்துள்ளார்.அதில், டிரம்ப் கூறியுள்ளதாவது: ரஷ்ய அதிபர் புடினுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. ஆனால் தேவையில்லாமல் ஏராளமான மக்களை அவர் கொன்று குவிக்கிறார். எந்தவித காரணமும் இன்றி, உக்ரைன் நகரங்களில் ஏவுகணைகளை வீசி தாக்குகிறார்.

அவருக்கு முழு பைத்தியம் பிடித்துவிட்டது. புடின், உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற நினைத்தால், அதுரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தன் பேச்சு மற்றும் செயல்கள் வாயிலாக, அவரது நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே பிரச்னைகளையே ஏற்படுத்துகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை;அதை அவர் நிறுத்துவது நல்லது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்காது. இது ஜெலன்ஸ்கி, புடின், பைடன் ஆகியோரின் போர்; டிரம்பின் போர் கிடையாது. மிக மோசமான தாக்குதல்களை நிறுத்துவதற்கான உதவிகளை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போர் நிறுத்தத்துக்கு புடின் மறுப்பதால், ரஷ்யா மீது, இந்த மாதம் ஏராளமான தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ளன. ஆனால், ரஷ்யா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அடிக்கடி கூறும் டிரம்ப், இதுவரை அதுபோன்று எதுவும் செய்யவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us