Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

எனக்கில்லை நோபல் பரிசு; புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் தந்தது பாக்.,

ADDED : ஜூன் 21, 2025 07:25 PM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப்போல், 'எனக்கில்லை நோபல் பரிசு' என்று புலம்பிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரது பெயரை பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பஹல்காம் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நிலைகள் மீதும், பயங்கரவாதிகள் மீதும் இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்நடவடிக்கையால் இருநாடுகள் இடையே போர் மூளலாம் என்ற நிலைமை தோன்றியது.

போர் பதற்றச் சூழலுக்கு மத்தியில் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவை எடுத்தன. ஆனால், அமெரிக்காவின் முயற்சியால் தான் போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியானதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். இதை இந்தியா முற்றிலும் மறுத்து விட்டது.

இந் நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலை தீர்க்க உதவியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் கூறி உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மோதலை ராஜதந்திரமான தலையீடு மற்றும் தலைமைத்துவம் மூலம் டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கண்ணியமான முறையில் சமாதானத்தை நிலைநாட்டியவர் என்ற அடிப்படையில் இந்த பரிந்துரையை மேற்கொள்வதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது.

பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. காசா இனப்படுகொலை, ஈரான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவு போன்றவற்றுக்கு டிரம்ப் அளித்த ஆதரவை மேற்கோள் காட்டி இந்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் அமைதிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கப் போவதில்லை என்று டிரம்ப் வெளிப்படையாக சமூக வலைதளத்தில் புலம்பி இருந்தார். திருவிளையாடல் படத்தில் வரும் தருமியைப் போல், 'எனக்கில்லை, எனக்கில்லை' என்ற அவரது புலம்பல், நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அப்படி புலம்பிய டிரம்புக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தாங்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us