மகன் கழுத்தை அறுத்து கொன்ற இந்திய பெண்; அமெரிக்காவின் டிஸ்னிலேண்டில் கொடூரம்
மகன் கழுத்தை அறுத்து கொன்ற இந்திய பெண்; அமெரிக்காவின் டிஸ்னிலேண்டில் கொடூரம்
மகன் கழுத்தை அறுத்து கொன்ற இந்திய பெண்; அமெரிக்காவின் டிஸ்னிலேண்டில் கொடூரம்
ADDED : மார் 24, 2025 02:31 AM

நியுயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண், தன் 11 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்றார்.
நம் நாட்டைச் சேர்ந்த சரிதா ராமராஜு, 48, என்பவர், பிரகாஷ் ராஜு என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் வசிக்கிறார். இருவருக்கும் யதின், 11, என்ற மகன் இருந்த நிலையில், கடந்த 2018ல் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு பின், பிரகாஷுடன் யதின் இருக்கலாம் என நீதிமன்றம் அனுமதித்ததால், இருவரும் கலிபோர்னியாவில் இருந்தனர். வர்ஜீனியா மாகாணத்தில் சரிதா தனியாக வசித்தார்.
குறிப்பிட்ட நாட்கள் மட்டும் மகனை பார்க்க சரிதாவுக்கு அனுமதி உண்டு. அதன்படி, மகன் யதினை பார்க்க சமீபத்தில் கலிபோர்னியா சென்ற சரிதா, சுற்றுலா தலமான டிஸ்னிலேண்டுக்கு கூட்டிச் சென்றார். அங்கு ஹோட்டலில் மகனுடன் அறை எடுத்து தங்கிய சரிதா, மூன்று நாட்களாக மகனுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார்.
ஏற்கனவே, தன் கணவரை குடிகாரர்; புகை பழக்கம் உடையவர்; அவரைப் பார்த்து மகன் அச்சப்படுகிறான் என புகார்களை சரிதா கூறி இருந்தார்.
அதை பிரகாஷ் மறுத்த போதும் அதே குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்தார். கடந்த 19ம் தேதியன்று கணவரிடம் மகனை மீண்டும் ஒப்படைக்க வேண்டிய நாள். ஆனால், சரிதாவால் மகனை விட்டு பிரிய மனமில்லை.
இந்நிலையில், டிஸ்னிலேண்ட் வந்து மகனை அழைத்துச் செல்லும்படி பிரகாஷுக்கு தகவல் தெரிவித்து விட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய கத்தியால், யதின் கழுத்தை அறுத்து கொன்றார்.
சரிதாவும் துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பிரகாஷ் வந்து பார்த்தபோது, படுக்கையில் தன் மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் சரிதாவை, அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகனை கொன்றது, சமையல் கத்தியை கொலைக்கான ஆயுதமாக்கியது உள்ளிட்ட குற்றங்களுக்கு, அமெரிக்க சட்டப்படி அதிகபட்சம் 26 ஆண்டுகள் வரை, சரிதாவுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும்.