Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றார்?

ADDED : ஜூன் 11, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலின்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாக ஆய்வு அமைப்பு நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபராக இருந்த கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வென்று, இந்தாண்டு ஜன.,ல் பதவியேற்றார்.

அதிபர் தேர்தல் தொடர்பாக, 'ஸ்மார்ட் எலக் ஷன்ஸ்' என்ற அமைப்பு, ரகசிய புலனாய்வை நடத்தியது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அதன் அறிக்கையில், பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'புரோ வி அண்டு வி' என்ற தனியார் நிறுவனம், அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களை சரிபார்த்து, அவை சரியாக உள்ளதாக சான்றளிக்கும்.

இவ்வாறு பென்சில்வேனியா, புளோரிடா, நியூ ஜெர்சி, கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில், இந்த நிறுவனம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சான்றளித்தது.

அதாவது நாட்டின், 40 சதவீத கவுன்டிகளில் உள்ள ஓட்டு இயந்திரங்களை இந்த நிறுவனமே பரிசோதித்து, சான்றளித்தது.

அந்த நேரத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பல முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்யப்படும் மாற்றங்களை, நான்கு உறுப்பினர்கள் உள்ள தேர்தல் உதவி கமிஷன் உறுதி செய்ய வேண்டும். இதில், இரண்டு பேர், டொனால்டு டிரம்பின் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.

பொதுப்படையாக அறிவிக்காமல், அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்காமல், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் தாக்கம், பல இடங்களில் தெரிய வந்தது. குறிப்பாக முக்கிய இரண்டு கட்சி அல்லாத மற்றொரு கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு, நியூயார்க்கின் ராக்லேண்டு கவுன்டில், ஒன்பது பேர் ஓட்டளித்துள்ளனர். ஆனால், 5 ஓட்டுகள் மட்டுமே அவருடைய பெயரில் பதிவானது.

இதுபோல மற்றொரு இடத்தில், 5ல் 3 மட்டுமே அந்த வேட்பாளர் பெயரில் பதிவாகியுள்ளது.

இது சிறிய கட்சிகளுக்கு மட்டும் ஏற்படவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில், கமலா ஹாரிசின் பெயர், முதல் வரிசையில் இல்லாமல், கீழே தள்ளப்பட்டிருந்தது.

ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினரான கிறிஸ்டன் கிளிபிராண்டின் நியூயார்க்கின் சில பகுதிகளில், கமலா ஹாரிசுக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை.

ஜனநாயகக் கட்சி மிகவும் வலுவாக உள்ள இந்த மாகாணத்தில், குடியரசு கட்சியின் அனைத்து செனட் உறுப்பினர்கள் பெற்றதைவிட, டொனால்டு டிரம்புக்கு கூடுதலாக, 7.50 லட்சம் ஓட்டுகள் கிடைத்துஉள்ளன.

இவற்றில் இருந்து திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகிறது.

தேர்தலுக்கு முன்னதாக, ஒரு பிரசார கூட்டத்தில், தன் ஆதரவாளரான தொழிலதிபர் எலான் மஸ்கை, டொனால்டு டிரம்ப் பாராட்டி பேசினார். 'அவரால், எந்த கம்ப்யூட்டரையும் ஹேக் எனப்படும் உள்ளே புகுந்து மாற்ற முடியும்' என, பாராட்டினார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசிய எலான் மஸ்க், 'எதற்குள்ளும் நுழைந்து மாற்ற முடியும்' என, கூறினார். மேலும், சமீபத்தில் டிரம்புடன் மோதல் ஏற்பட்டபோது, 'என் உதவி மட்டும் இல்லையென்றால், டிரம்பால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்று கூறினார்.

இவற்றை வைத்து பார்க்கும்போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தே டிரம்ப் வென்றுள்ளார். தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும் நடந்திருந்தால், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட கவுன்டியில் நடந்த தேர்தல் தொடர்பாக, ஸ்மார்ட் எலக் ஷன் அமைப்பு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதை விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில், அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும், அல்லது முறைகேடுகள் நடந்ததா என்று விசாரணை நடத்தினாலும் அதனால், எந்தப் பயனும் இருக்காது என்று கூறப்படுகிறது. பார்லிமென்டின் இரண்டு சபைகளும், டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வானதை அங்கீகரித்துள்ளன. அதை மாற்ற முடியாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us